
மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டத்தின் ஏவுதல் திகதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பல தாமதங்களுக்குப் பிறகு, தற்போது எதிர்வரும் ஏப்ரல் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 30 ஆகிய திகதிகள் ஏவுதலுக்கான சாத்தியமான நாட்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
நிலவு தனது சுற்றுப்பாதையில் சரியான இடத்திற்கு வருவதைப் பொறுத்தே இந்த ஏவுதல் காலம் தீர்மானிக்கப்படும் என்பதால், மிகக் குறுகிய கால அவகாசமே இதற்காக உள்ளது.
1960 மற்றும் 70-களில் முன்னெடுக்கப்பட்ட அப்போலோ திட்டங்களுக்குப் பிறகு, மனிதர்களை நிலவை நோக்கி அழைத்துச் செல்லும் முதல் முயற்சியாக இது அமையவுள்ளதுடன், விண்கலத்தில் பயணிக்கவுள்ள நான்கு விண்வெளி வீரர்களும் தற்போது முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் நாசா கட்டளை அதிகாரி ரீட் வைஸ்மேன், விமானி விக்டர் குளோவர், ஆய்வு நிபுணர் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகவரகத்தின் ஜெரமி ஹேன்சன் ஆகியோர் நிலவை நோக்கிப் பயணிக்கவுள்ளனர்.
பயணத்திற்கு முன்னதாக விண்வெளி வீரர்களுக்கு எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்தவாறே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் விண்கலத்தின் ஹைதரசன் எரிபொருள் கசிவு மற்றும் மார்ச் மாதம் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
தற்போது இந்தத் தொழில்நுட்பச் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, ஏப்ரல் தொடக்கத்தில் விண்கலத்தை ஏவுவதற்கு நாசா இலக்கு நிர்ணயித்துள்ளது


