
அம்மா,
இராணுவ முகாம் தாக்குதல் ஒன்றிற்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
எனக்குக் கிடைத்த உணவு நேரத்தில் உனக்கு இந்தக் கடிதத்தினை எழுதி முடித்துவிடவேண்டும் என்ற வேகத்துடன் இக்கடிதத்தை எழுதுகின்றேன். போன செவ்வாய் கிழமை ……
அரியாலைச் சந்தியில் என்னைக் கண்ட வேலாயுதம் மாமா கேட்ட கேள்வி. இப்போதும் என் நெஞ்சில் மாறத வலியைத் தந்து கொண்டிருக் கின்றது. ” பிள்ளை, அம்மா கடிதம் போட்டவவோ?” வேலாயுதம் மாமா கேட்கிறார். எனக்கு ஒன்றும் விளங் கவில்லை. “ஏன் எனக்கு அம்மா கடிதம் போட வேண்டும்” என்ற இனம் புரியாத உணர்வுடன் கேட் கிறேன்.
“உனக்குத் தெரியாதோ பிள்ளை? உன்னுடைய கொம்மாவும் சகோதரங்களும் கனடாவிலை இருக்கின்ற உன்ரை அப்பாட்டை போட்டினம். நான்தான் கொழும்பிலை கொண்டுபோய் அனுப்பிப்போட்டு வந்தனான். அங்கையிருந்து இப்ப எனக்கு கடிதம் வந்திருக்குது. ஊரிலை என்ன நடக்குது என்று தங்களுக்கு எழுதட்டாம். எல்லாம் வல்ல ஒட்டோவா பிள்ளையார் ஒரு குறையும் விடமாட்டார் என்று எழு தியிருக்கிறா பிள்ளை. அதுதான் கேட்டனான் …. உனக்கும் கொம்மா கடிதம் கிடிதம் போட்டிருப்பா என்று.
சொல்லியபடியே மாமா என் முகத்தைப் பாத்தார்.
என் நெஞ்சில் ஆயிரம் எரிமலைகள் வெடித்தன குமுறலை அடக்கிக்கொண்டு வேலாயுதம் மாமாவைப் பார்த்துச் சிரிக்கிறேன்.. ஆம்! வேறுவிதமாக எனக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
சிரிப்பின் பின்னால் என் விழிகளில் திரண்டு வந்த கண்ணீரை ஆதரவுடன் எனது தோளைப் பற்றிய
பொறுப்பாளர் அக்காவின் கரங்கள் துடைத்துவிட்டன. ஒரு கணத்தில் என்னைச் சுதாகரித்துக் கொள்கிறேன். என்னுடைய அக்காக்களையும், அண்ணாக்களையும் நினைத்துப் பார்த்தேன். சண்டைகளிலே காயப்பட்டுப்போய் ஆஸ்பத்திரிக் கட்டிலிலே கிடக்கிற நேரத்திலே அன்போடு அரவணைக்கத் துடிக்கின்ற தேசத்தின் பெற்றோர்களை நினைத்துப் பார்த்தேன்.. பரந்த வெளிகளிலே நீரே இன்றி வரண்டுபோய்க் கிடக்கும் ஆனையிறவின் உப்புச்சேற்று வெளிகளில் நின்று சண்டை பிடிக்கும் போது, பொம்மரையோ செல்லையோ கணக்கெடுக்காது எங்களுக்கு, உணவு, நீர் தந்த எங்கள் அருமைச் சகோதரர்களை நினைத்துப் பார்த்தேன்.
நான் அனாதையில்லையம்மா…
நான் அனாதை இல்லை, நான் இந்தத் தேசத்தின் குழந்தை.
கொக்காவில் முகாம் தாக்குதலுக்குப் போகும் போது கப்டன் உஷாக்கா சொன்ன வார்த்தையை இப்பவும் என்னால் மறக்கமுடியாது. ‘நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். எமது வாழ்வும், சாவும் இந்த மண்ணிலே தான்’ என்று அவ சொன்னபடிதான் செய்தா அம்மா.
அம்மா! கொக்காவில் சண்டையில அவ காயப்பட்டுப்போனா. நெற்றி யிலே பெரிய காயம். தனது உயிர் பிரியப்போகின்ற அந்த இறுதி நேரத்திலும், மண்மாதாவை முத்த மிட்டு அந்த மண்ணிலே ஒரு கீறு எடுத்து தன் நெற்றியிலே தனக்குத்தானே நெற்றித் திலகமிட்டுக் கொண்டா அம்மா. இவளைப்போல ஆயிரக்கணக்கான அக்காக்களதும் அண்ணாக்களதும் தியாகத்தால் தானம்மா எமது தேசத்தின் ஒவ்வொரு அங்குல நிலமும் மீட்கப்பட்டுக்கொண்டு வருகிறது.
வீரம் விளைந்த இந்த மண்ணில் பிறந்தவள் அம்மா நான். வீரமும், அளப்பரிய தியாகமும் நிரம்பிய ஒப்பற்ற தலைவனின் பாசறையில் வளர்ந்தவளம்மா நான். எமக்கு எம் முன்னே சென்ற எங்கள் தோழர்களின் பாதச் சுவடுகள் வழிகாட்டி நிற்கின்றன.
அம்மா,
இந்தக் கடிதத்தை நீ படிக்கும் போது சில வேளைகளில் நீ பெற்றெடுத்த உனது மகள் அன்புத் தேசத்தின் அரவணைப்பில் கல்லறை ஒன்றில் துயின்றுகொண்டிருப்பாள். ஆனால் அவளது உணர்வுகளைச் சுமந்தபடி இந்தச் தேசம் திரண்டு நிற்கும். இந்த ஆத்மீக உறவினை உனக்கு எப்படியம்மா விளங்கப்படுத்த முடியும்?
வசதியாக என்றாலும்… எப்படியேனும் உங்களது உயிர்களை மட்டும் பாதுகாத்திட வேண்டும்,
வாழ வேண்டும் என்று அவசர அவசரமாக எனக்குச் சொல்லிக் கொண்டு போகக்கூட நேரமில்லாமல் போன உனக்கு, தாக்குதலுக்கு அணிவகுத்து நிற்கின்ற இந்நிலையிலும் சில விடயங்களைச் சொல்லிவைக்க வேண்டும் என்ற துடிப்புடன் இக்கடிதத்தை எழுதுகி றேன்.
தமிழீழம். இது எங்கள் பாரம்பரிய நிலமம்மா. இங்கையே நாம் வாழ்வதற்குரிய
உரிமை சிறீலங்கா அரசால் மறுக் கப்படுகின்றது என்றால், அன்னிய மண் எவ்வளவு நாளைக்கு
ஆதரவுதரும் என்று நினைக்கிறாய் அம்மா.
“அகதி” என்ற போர்வைக்குள் உங்களுக்கு அடைக்கலம் தந்த நாடுகள் எல்லாம் நீங்களாக இருக்குமட்டும், சொந்த இலாபங்களைக் தனது கணக்கில் எடுத்து உங்களைத் தாங்கிக் கொள்ளும்.
எப்பொழுதாவது உங்களிடம் ‘மனிதம்’ தலை துாக்கும்
போது நீங்கள் உரிமை கேட்டுப் போராடுவீர்கள். அப்பொழுது உங்கள் உரிமைகள் மட்டுமல்ல, உயிர்களும் விலைபேசப்படும். அப்போது என்னம்மா செய்யப் போகிறீர்கள்? உங்களுடன் தமிழனது வரலாற்றை அழித்துக்கொள்ளப் போகிறீர்களா?
அம்மா,
என்னதான் அன்னை என்ற உறவில் இருந்து நீ அன்னியப்பட்டுப்போய் நின்றாலும்,
எனது தேசத்தின் புதல்வர்களில் நீயும் ஒருத்தி என்பதை என்னால் மறுப்பதற்கில்லை. இந்நிலையை நீயும், உன்னைப் போன்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டுமம்மா.
உதிரத்தால் எம் மண்ணின் வரலாறு எழுதப்பட் டுக் கொண்டிருக்கும் போது நீங்கள் ஓட்டோவாவிலுள்ள பிள்ளையாரைக் கேட்டு என்ன பலன்?
தமிழனது பண்பாட்டை, அவனது தனித்துவத்தை அழித்துவிடவேண்டும் என்பதில் ஒரே குறியாய் நிற்கும் சிங்கள அரசு கோயில்களை மட்டுமல்ல
பாடசலைகள், வைத்தியசாலைகள் அனைத்தை யுமே குண்டுவீசித் தகர்க்கிறது.
தென் தமிழீழத்தின் தெருக்களிலே நடமாட முடியாத அளவிற்கு இராணுவ அடாவடித்தனங்களும், துரோகக் கும்பல்களின் அட்டுழியங்களும். …
இத்தனைக்கும் மத்தியில் தான் இன்று எமது போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. எந்தத் தடைகள் வரினும் தகர்த்தெறிந்து, போராடுகின்ற அந்த மனோவலிமைதனை எம்முள் தலைவன் வளர்த்திருக்கிறான். இந்த மனோவலிமையுடன் தான் நாம் பாரதத்திற்கு பாடம் படிப்பித்தோம். சிறிலங்கா அரசிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறோம்.
இது எங்களது உரிமைப் போராட்டம் அம்மா!
இது நாங்கள் வாழ்வதற்காக மேற்கொள்ளுகின்ற போராட்டம் அம்மா. ‘வேலை இல்லாததுகள், கஸ்டப்பட்டதுகள் அதுகள் போய்ச்சாகலாம், எங்களுக்கு என்ன தலைவிதியா’ என்று உன்னைப் போல் அவசர அவசரமாக ஓடி வந்தவர்களுக்கும் இதை ஒருதரம் சொல்லிவை அம்மா.
எங்களது எல்லைகள் மீட்கப் படும் வரை எங்கள் மண்ணிலே புலிக்கொடி உயர்ந்து, எழுந்து நின்று ஆடும் வரை எங்களின் போராட்டம் தொடரும். இந்தப் போராட்டத்தில் நாளை நானும்… என் தோழர்களும் இம்மண்ணில் விடுதலைக்காக விதையாய் போயிருப்போம்.
அப்போது..
நீ உனது மகளை பற்றித் தெரிந்து கொண்டதிலும் பார்க்க,எனது தேசம் உனது மகளைப்பற்றி கூடுதலாக அறிந்திருக்கும். அவர்களிடம்
என்னை கேட்டு உன்னால் என் தோழர்களைப் புரிந்துகொள்ள முடியாது.
நானும், எனது தோழர்களும் துயில்கின்ற ‘அங்கே’ செல்வாயா….
உன்னால் விளங்கிக்கொள்ள முடியாமல் போன அத்தனை விடயங்களையும் அங்கே வீசுகின்ற காற்று உன் காதில் அறைந்து சொல்லும்.
மண்டியிட்டு என் கல்லறை முன் அழுது என் உணர்வைக் காயப்படுத்திவிடாதே.
உன்னிடமிருந்து கேட்டுக் கொள்வதல்லாம் ஒன்று தான்.
நாளை எமது தேசத்தின் சுதந்திர விடியலில் உன்னை, எனது அப்பாவை, என் சகோதரர்களை வரவேற்க என் மண் காத்து நிற்கும்.
என் உடன் பிறந்தவர்களுக்குச் சொல்லிவை இதுதான் எங்களின் தேசம் என்று.
உனதுமகள் ஆண்டாள்.
-எரிமலை
மார்கழி 1992


