அம்பாறை உடும்பன்குளம் படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

0
35

19-02-1986 அன்று இன்றைய நாளில் அம்பாறை உடும்பன் குளப்பகுதியில் 120 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த 40ஆவது மறக்க முடியாத நினைவு நாள் இலங்கை தமிழர்கள் வரலாற்றில் கிழக்குமாகாணத்திலும் சிறீலங்கா இராணுவத்தினால் கொடூரமான முறையில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன.

இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை பெண்களை வெட்டியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர். இந்த வகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்கு மாகாணம் கண்டிருக்கின்றது.

இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சிங்கள இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்ப முடியாமல் போனது. இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உடும்பன் குளம் என்ற கிராமத்தில் தான் கொடூரமான படுகொலைச் சம்பவம் ஒன்று 1986 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. வளமான மண்ணில் வளமாக வாழ்ந்த உறவுகள் 40 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்றும் அங்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு இப்படுகொலையானது மறக்க முடியாத ரணவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் கொண்ட அழகிய தொரு கிராமமாகும். உடும்பன் குள கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்கள் வயல் விதைப்புக்களிலும் அறுவடைக் காலங்களிலும் தங்கள் குடும்பத்துடன் சென்றுஅருகில் உள்ள மலைகளில் வடிகாலிலேயே வாழ்ந்து வந்தார்கள். அக்காலப்பகுதியில் தங்கள் உணவுத் தேவைக்கு மலைகளில் உள்ள மேடுகளில் சோளம் வெண்டி கீரை போன்றவற்றை பயிரிட்டும் அருகில் உள்ள குளம் ஒன்றில் மீன்களை பிடித்தும் உணவாக்கிக் கொள்வார்கள்.

இவ்வாறு தங்கள் நிலங்களில் நிம்மதியாக வாழ்ந்த இம்மக்கள் தங்களுக்கு இப்படி ஒரு கொடூரம் நடக்கவிருப்பதை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

இப்படுகொலைச் சம்பவமானது தற்செயலாக வந்த இராணுவத்தினராலோ அல்லது பதில் நடவடிக்கை என்ற ரீதியிலோ இப்படுகொலைகள் செய்யப்படவில்லை. மாறாக இம்மண்ணில் இருந்து இவர்களை விரட்டுவதே இவர்களின் உள்ளார்ந்த நோக்கமாகும் என்பதை இம்மக்கள் பின்னாளில் அறிய முடிந்தது.

19-02-1986 அன்று காலை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமில் இருந்த இராணுவம் ஏற்கனவே திட்டமிட்டபடி உடும்பன்குளம் கிராமம் நோக்கி சென்றது. அக்கிராமத்தைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் தங்களோடு பிறமத காடையர்களையும் இணைத்துக் கொண்டனர். கிராம மக்களில் கூடுதலானவர்களை மாசிமாத அறுவடைக்காலம் என்பதால் வயல் வேலைகளுக்குச் சென்று விடுவார்கள் அன்றும் அப்படித்தான் வயல் வேலைக்குச் சென்று விட்டார்கள். வயலில் வேலை செய்த அப்பாவி பொதுமக்களை கைது செய்து கைகளையும் கண்களையும் கட்டி துன்புறுத்தினார்கள். ஆண்களுடைய உறுப்பை அறுத்தார்கள். பின்னர் அவர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு வைக்கோலை போட்டு எரித்து விட்டுச் சென்று விட்டார்கள்.

இந்தப் படுகொலை சம்பவத்தினை பற்றி வன்னியிலிருந்து சென்ற ஒரு பத்திரிகையாளர் இந்த படுகொலை சம்பவத்தில் உயிர் தப்பியவர்களை நேர்காணல் செய்து மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்றுவரை இப்படுகொலைக்கு நீதிகிடைக்காத நிலையில் சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பு தொடர்கின்றது.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்யும் காலமாகும். உடும்பன் குளத்தில் தங்களது வயல்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொட்டகை அமைத்து வயல் வேலைகள் முடியுமட்டும் அங்கேயே தங்கியிருந்து தமது அறுவடையினை முடித்துக்கொண்டு நெல் மூட்டைகளுடனேயே திரும்புவது வழக்கமாகும். இவ்வாறே 1986 ஆம் ஆண்டு மாசி மாதமும் வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள்.

1986.02.19 அன்று காலை 6.30 மணியளவில் கொண்டைவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினரால் உடுப்பன்குள வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும் சுற்றி வளைக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இராணுவத்தினராற் கைது செய்யப்பட்டு கைகள், கண்கள் கட்டப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்தவர்களில் பெண்கள் இராணுவத்தினராற் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆண்களின் ஆண் உறுப்பு வயலில் நெல் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரிவாளினால் வெட்டப்பட்டது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். பலர் இராணுவத்தினரின் துன்புறுத்தலினாலேயே தமது உயிரினை இழந்தார்கள். பின்னர் எஞ்சியிருந்தவர்களைச் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்ததுடன், அவர்களின் உடலினை அறுவடை செய்யப்பட்ட நெற்சூட்டினுள் ஒன்றாகப் போட்டு எரித்தார்கள்.

இவ்வாறு 1986.02.19 அன்று காலை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், வாடியில் தங்கியிருந்தவர்கள் என நூற்றுமுப்பத்துமூன்று பேரிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் ஒரு சிலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து 21.02.1986 அன்று மட்டக்களப்பு பிரசைகள் குழு வணபிதா சந்திரா பெர்ணான்டோ, நாளேட்டாளர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த

தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள்.

உடும்பன் குளத்தில் வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் மீதான தாக்குதலை நடத்திய இராணுவத்தினருக்குப் பொறுப்பாக லெப்டினன்ட் சந்திரபால தலைமை தாங்கினார். இச்சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லீம் குழுக்களும் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.

19.02.1986 அன்று உடும்பன்குளம் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

இராசையா தவேந்திரன் (வயது 18)
இராமசாமி கந்தையா (வயது 48)
ந.கோபாலகிருஸ்ணன்
ந.விநாயகமூர்த்தி
க.பாக்கியராஜ்
கதிரேசப்பிள்ளை வைரமுத்து
குமரவேல் நாகராசா (வயது 27)
கணேசமூர்த்தி பேரின்பன் (வயது 28)
கணேசபிள்ளை மோகனராசா (வயது 22)
கணபதி வடிவேல் (வயது 27)
பத்மநாதன்.
மைலன் தியாகராசா (வயது 18)
தர்மன் (வயது 22)
தாசப்பு செபமாலை
தாசப்பு செல்லையா
துரை இராமலிங்கம்
தம்பிப்பிள்ளை குமாரவேல்
மயில்வாகனம் தியாகராசா (வயது 13)
மார்க்கண்டு ரவீந்திரன்
முத்துப்போடி சுமனாவதி
முத்துசாமி முத்துலிங்கம்
மசன்னா ஜெயராஜ்
ஆ.நல்லதம்பி
ஆ.சோமசுந்தரம்
பொன்னன் இராசதுரை
பொன்னம்பலம் யோகராசா (வயது 18)
சோமசுந்தரம் கருணாநிதி (வயது 21)
வெங்கிட்டன் குழந்தை
ஞானமுத்து புவனேந்திரன்
சுந்தரம் சின்னவன் (வயது 20)
சீனித்தம்பி
சீனித்தம்பி தவநாகன் (வயது 30)
சீனித்தம்பி அருள்செல்வன் (வயது 18)
சில்வஸ்ரார் இன்னாச்சி (வயது 32)
சுவாமி டேவிட் (வயது 29)
வயிரமுத்து சுந்தரலிங்கம்
வர்ணகுலசிங்கம் புண்ணியமூர்த்தி (வயது 21)
விஸ்வகேது இராசா (வயது 23)
ரங்கன் போல்
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here