
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த வல்லாட்டம் (சதுரங்கம்) போட்டி நிகழ்வு இன்று 04.01.2026 ஞாயிற்றுக்கிழமை திரான்சி நகரில் மாவீரருக்கான பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.

பொதுச்சுடரினை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 1991 இல் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இடம்பெற்ற திடுநேர்கையில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்.மாணிக்கம் சண்முகநாதன் கஜேந்திரன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்ப உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.
அவர் தனது உரையில் , கடந்த காலங்களைவிட இம்முறை அதிகளவான போட்டியாளர்கள் அதிலும் சிறுவர்கள் கலந்துகொள்வதையிட்டு தனது மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் வெளிப்படுத்தியிருந்தார்.
போட்டி விதிமுறைகளை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு..இராஜலிங்கம் அவர்கள் வழங்கி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.. மாலை வரை பலசுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என சுமார் 130 இற்கு மேற் பட்டோர் கலந்துகொண்டு போட்டியிட்டனர்.. போட்டியாளர்களுடன் ஆதரவாளர்களும் கலந்துகொண்டமையால் மண்டபங்கள் அவர்களால் நிறைந்து காணப்பட்டன.
யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம். பாடும்மீன் வி.கழகம், வட்டுக்கோட்டை வி.க, நல்லூர்ஸ்தான் வி.க., தமிழர் வி.க.93. தமிழர் வி.க.94, தமிழர் வி.க. 95, அரியாலை ஐக்கிய.வி.கழகம் ஆகிய கழகங்கள் பங்குகொண்டு சிறப்பித்திருந்தன.
(போட்டி முடிவுகள் விரைவில்)


















