
லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகார வழக்கில் இணையம் வழியாக சாட்சியமளிக்குமாறு இனப்படுகொலையாளி முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் குறித்த இருவரும் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.
காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை அடுத்த மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றிலிருந்து ஒன்லைன் ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதம நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தச் சூழ்நிலையை அரசாங்கம் மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதுவதாகவும் யாழ்ப்பாணம் பிரதம நீதவான் எஸ். லெனின்குமார் குறிப்பிட்டுள்ளார்.


