மொரோக்கோ எல்லையூடு ஸ்பெயினுக்குள் நுழைந்த 49,000 புலம்பெயர்ந்தோர்!

0
73

கடந்த 24 மணிநேரத்தில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவுக்குள் சுமார் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் நீந்தி நகருக்குள் நுழைவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகின. இரவிலும் இவ்வாறு மக்கள் ஊடுருவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய நாட்களில் இந்தப் பகுதிக்கு வர முயன்றபோது குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

செயுட்டா அல்லது ஸ்பெயினின் மற்றொரு வட ஆப்பிரிக்க பகுதியான மெலிலாவை அடைய முயன்றபோது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஸ்பெயின் அதிகாரிகளின் இந்த மதிப்பீட்டின்படி, கடந்த ஒரு நாளில் செயுட்டாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, சுமார் 83,600 மக்கள் வசிக்கும் அந்த நகரத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமாக இருக்கலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் சட்டவிரோதமாக அப்பகுதிக்குள் நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

செயுட்டா மற்றும் மெலிலாவில் பாதுகாப்பை வலுப்படுத்த ஸ்பெயின் தற்போது தனது ஆயுதப் படைகளை நிலைநிறுத்தியுள்ளது. அங்கு ஒரே இரவில் 300 முதல் 400 பேர் வரை எல்லையைக் கடந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை செயுட்டாவுக்கு வருகை தந்தபோது பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், எல்லை தாண்டி வருவதைக் கண்டித்ததோடு, இது ஸ்பெயினின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here