
தமிழின உணர்வாளர் இயக்குநர் இமயம் மா.பாரதிராஜா அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் கண்ணீர் வணக்கம் தெரிவித்துள்ளது. அவரது இறுதி வணக்க நிகழ்வு நேற்று 11.06.2026 வியாழக்கிழமை தமிழகத்தில் இடம்பெற்றது. அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது..
இதுதொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்துள்ள அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:
11.06.2026
தமிழின உணர்வாளர் இயக்குநர் இமயம் மா.பாரதிராஜா
அவர்களிற்கு கண்ணீர் வணக்கம்.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், திரைக்கதை அமைப்பாளர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் சிறந்த நடிகருமாகிய தமிழின உணர்வாளர் “இயக்குநர் இமயம்” மா.பாரதிராஜா அவர்கள், 10.06.2026 அன்று சாவடைந்தார் என்ற செய்தியானது, உலகத்தமிழ் மக்களிற்கு ஆழ்ந்த துயரினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் அல்லிநகர் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இவர், சிறுவயதிலிருந்து, ஒரு தெருக்கூத்துக் கலைஞனாகத் தனது கலைப்பயணத்தினை ஆரம்பித்து, பாரதிராஜா என்னும் பெயருடன், 1977 ஆம் ஆண்டு முதல் அண்ணளவாக நாற்பது திரைப்படங்களிற்கு கூடுதலாக இயக்கியிருந்ததோடு, ஒரு பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட இவர், சாதிய அடக்குமுறைகளிற்கு எதிராகவும் பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். குறிப்பாக ‘கல்லுக்குள் ஈரம், நிழல்கள், வேதம் புதிது, புதுமைப்பெண், அந்திமந்தாரை, கருத்தம்மா” போன்ற பல படைப்புகள் இவரை இந்தியாவின் ஒரு சிறந்த யதார்த்தமான கலைப்படைப்பாளியாக அடையாளப்படுத்தியது. தமிழ்த் திரைப்படங்களில் கிராமத்து மண்வாசனையினை நுகரவைத்ததோடு, தனது படைப்புகளில் பலர் சொல்லத்துணியாத குமுகாய வாழ்வினை மிகவும் துணிச்சலோடு வெளிக்கொண்டுவந்த சிறந்த படைப்பாளியாவார் .
கலைத்துறையில் மட்டுமல்லாது தமிழ் அரசியலிலும் மிகவும் விழிப்புணர்வு கொண்ட மனிதராக இவர் விளங்கினார். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவரான இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முழுமையாக ஆதரித்;துடன், தமிழீழத்திற்கு வருகைதந்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களையும் தளபதிகளையும் சந்தித்திருந்தார்.
தமிழீழத்தில் தமிழ்மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்புப் போரைக் கண்டித்து, தமிழ்நாட்டில் பல போராட்டங்களைத் தலைமைதாங்கி நடாத்தியிருந்த இவர், இதன்காரணமாக கைது செய்யப்பட்டு விடுதலையானவராவார். தமிழின அழிப்பினை நிறுத்துவதற்குப் பதிலாக, அதற்குத் துணைநின்ற அன்றைய இந்திய மத்திய அரசினைக் கண்டித்ததோடு மட்டுமல்லாது, இந்திய மத்திய அரசினால் தனக்கு வழங்கப்பட்ட உயரிய விருதினைத் திருப்பி அனுப்பிய தமிழின உணர்வாளராவார்.
தமிழின உணர்வாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டப் பற்றாளருமான, இயக்குநர் இமயம் மா.பாரதிராஜா அவர்களது இழப்பு ஈடுசெய்யமுடியாதது, இவரது, பிரிவுத்துயரினால் வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், அனைவரிற்கும், எமது ஆழ்ந்த இரங்கலினைத் தெரிவிப்பதோடு, அனைவரது துயரிலும் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.



