
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கை போர்க் குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) முன் நிறுத்தப்பட வேண்டும் என கனடாவின் பிராம்ப்டன் மாநகர மேயர் பேட்ரிக் பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.

பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, கனடாவில் அமைந்துள்ள ‘தமிழ் இனப்படுகொலை நினைவகத்திற்கு’ (Tamil Genocide Monument) மேயர் பேட்ரிக் பிரவுன் விஜயம் செய்தார். நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்:”இன்று இரவு, பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை நினைவுகூரவும், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் தமிழ் இனப்படுகொலை நினைவகத்திற்கு விஜயம் செய்தமைக்கு பெருமை அடைகிறேன்.
தமிழ் இனப்படுகொலைக்கு பொறுப்பான இலங்கை போர்க் குற்றவாளிகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) முன் நிறுத்தப்படத் தகுதியானவர்கள்.” பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கிடைக்க வேண்டும் என்பதில் தாம் தொடர்ந்து உறுதியோடு செயல்படப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


