கனேடிய மண்ணில் “ஆகுதி வார்க்கும் யாகம்” கவனயீர்ப்புப் போராட்டம்!

0
24

கனடிய மண்ணில் இன்று “ஆகுதி வார்க்கும் யாகம்” கவனஈர்ப்புப் போராட்டம், மற்றும் எழுச்சி நிகழ்வு பிரம்டனில் சிங்கூசி பூங்காவில் அமைந்துள்ள தமிழின அழிப்பு நினைவக முன்றலில் உணர்வுபூர்வமாக கனடியத் தமிழர் சமூகம் மாணலர் சமூகத்தினால் பெருமளவு மக்கள் வருகையோடு எழுச்சியாக நடைபெற்றது!

தாயகத்தில் ஆகஸ்ட் 30ம் நாளாக விடிந்திருக்கும் இவ்வேளையில் அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் “ நீதிக்கான நீள் பயணம்” மாநாடு நடைபெறவுள்ளது!

இந்நாளில் போராடும் எம் தாயக உறவுகளின் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் வண்ணமும்,

செம்மணியில் சிங்களப் பேரரசினால் கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்ட எம் உறவுகளிற்கு நீதி வேண்டியும்,

செம்மணிப் படுகொலை உள்ளிட்ட அனைத்து தமிழினப் இனப்படுகொலைகளிற்கும் அனைத்துலக விசாரணையூடாக நீதி வேண்டியும்

இப் போராட்டம் கனடியத் தமிழர்களால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக வருகை தந்த பிரம்டன் நகரபிதா பற்றிக் பிரவுண் அவர்கள் பொதுச் சுடரேற்றி நிகழ்வைத் தொடக்கி வைத்து சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.

“சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பு, யுத்தக் குற்றங்களிற்கு நீதி வேண்டிப் போராடும் கனடியத் தமிழ் மக்களோடு தானும் பிரம்டன் நகரசபையும் எப்பொழுதும் தோள்கொடுத்துக் குரல் கொடுக்கும்!” என உறுதி அளித்தார்.

செம்மணியில் அரசபடையினரால் கொன்று புதைக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட உறவுகளிற்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி உணர்வினால் உருகி விழியூறி வணக்கம் செலுத்தினர் வருகை தந்த உறவுகள்.

எழுச்சிக் கலை நிகழ்வுகள், எழுச்சி உரைகளோடு உறுதி மொழி ஏற்று நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

தாயகத்தில் நித்தமும் போராடி கண்ணீரால் வரலாறு எழுதும் எம் அன்னையர்க்கு “உங்களோடு நாங்களும் இருக்கிறோம்!” என்ற இந்த செய்தி மேலும் நம்பிக்கையையும் வலிமையையும் தரும் என நம்புகின்றேன்!

தாயக உறவுகளின் நிகழ்வும் சிறப்பாக நடக்க வேண்டுகின்றேன்!

போராட்டம் ஒன்றே தமிழினத்தின் விடிவிற்கான ஒற்றை வழிப் பாதை!

தேசம் விடியும்வரை போராடுவோம்!

  • சிவவதனி-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here