
அநுர அரசு ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் ஆகியும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான ஊடக நிறுவனங்கள் மீதான விசாரணைகளை இதுவரை ஆரம்பிக்காத நிலையில், உடனடியாக விசாரணைகளை துரிதப்படுத்தி அதற்குக் காரணமான ஊடக படுகொலையாளிகளைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று 31.07.2026 காலை 7.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகம் முன்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டு நீதி கோரி பதாகைகளை ஏந்தி குரல் எழுப்பினர்.. .

யாழ்ப்பாணத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்கவிருந்த நிகழ்வையே ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாகப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஓர் அங்கமாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கருத்தரங்கில் பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவிருந்தார். எனினும், கடந்த காலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அந் நிகழ்வை யாழ். ஊடக அமையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் முழுமையாகப் புறக்கணித்தனர்.

கருத்தரங்கைப் புறக்கணித்த ஊடகவியலாளர்கள், யாழ். மாவட்ட செயலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகக் திரண்டு, ஊடகச் சுதந்திரத்தை உறுதி செய்யக் கோரியும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கக் கோரியும் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




