சிறீலங்காவின் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்துவை வடக்கு மாகான முதல் அமைச்சர் சி.வி, விக்கினேஸ்வரன் நேற்று (12) சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு கோரியுள்ளார்.
வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் வாழ்வாதார நகர்வுகளை கையாள்வது குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் வடக்கு, கிழக்கு இணைப்பின் அவசியம் குறித்து முதலமைச்சர் வலியுறுத்தியதை அடுத்து அந்த விடயம் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் இணக்கப்பாடுகள் குறித்து ஆராய்வதாக உயர்ஸ்தானிகர் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்திய அரசாங்கத்துடன் ஏற்கனவே வடமாகாண சபை சார்பில் நாம் நீண்டகால பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். இதில் ஒரு கட்டமாகவே நேற்றும் நான் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கின் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான இருநாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது குறித்து வினவினேன். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி விமானநிலையத்தின் அபிவிருத்திகள் குறித்து ஆரம்பத்தில் இருந்தே இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு நாம் கொண்டுவந்துள்ளோம். ஆகவே அவற்றை கையாள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் தூத்துக்குடி, -தலைமன்னார் இடையிலான கப்பல் சேவையினை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆகவே இந்த நகர்வுகள் குறித்து பரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் வடமாகாணத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பது குறித்து ஆரம்பத்தில் இருந்து கலந்துரையாடப்பட்டு வந்த நிலையில் எவ்வாறான வீடுகள் அமைப்பது என்பது குறித்த சில சிக்கல் நிலைமைகள் காணப்பட்டன. பரிசீலனை செயற்பாடுகளும் கையாளப்பட்டன. இப்போது அவை குறித்து ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து பேசியிருந்தோம். வீடுகளை அமைப்பது குறித்த அவர்களின் தீர்மானத்தை விரைவில் தெரிவிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் வீட்டுத் திட்டம் அமைப்பது குறித்து மத்திய அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
அத்துடன் யாழ்ப்பாணம் நகர மண்டப புனரமைப்புகளுக்காக 800 மில்லியன் ரூபா நிதியை இந்தியாவிடம் இருந்து கோரியிருந்தோம். அது குறித்தும் ஆராயப்பட்டதுடன் மயிலிட்டி மீன்பிடி துறைமுக புனரமைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலும் அதனூடாக தமிழ் மக்களுக்கான பாதுகாப்புகள் குறித்தும் நாம் இதன்போது பேசியிருந்தோம். வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தில் ஆழமான பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் வடக்கின் நகர்வுகள் குறித்து மத்திய அரசாங்கத்தின் அனுமதிகள் மற்றும் ஒத்துழைப்பும் அவசியம். ஆகவே இவை குறித்து பேசுவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். மீண்டும் நாம் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார்.