வட கொரியாவானது அதி சக்தி வாய்ந்த ஐதரசன் குண்டொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசோதித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அது குறித்து உலக நாடுகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன.
அந்நாட்டின் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே–இன் வட கொரியாவின் இந்த அணு ஆயுதப் பரிசோதனை குறித்து கடும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வட கொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தடை விதிப்புகளை உள்ளடக்கி கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அனைத்து இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதுடன் அந்த நாட்டை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என தென் கொரிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற அவசரகாலக் கூட்டமொன்றையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சுங் இயுயி- யொங் தெரிவித்தார்.
அமெரிக்காவின் பலமான தந்திரோபாய சொத்துக்களை (செயற்றிறன் வாய்ந்த அணு ஆயுதங்களை) தென் கொரியாவில் நிலை நிறுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சுங் இயுயி- யொங் மேலும் கூறினார்.
அதேசமயம் வட கொரியாவின் பிரதான நட்பு நாடான சீனாவும் இந்த அணு ஆயுதப் பரிசோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட கொரியா தனது அணு சக்திப் பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச ரீதியான எச்சரிக்கைகளை அலட்சியம் செய்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த அணுசக்திப் பரிசோதனைக்கு சீன அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பையும் பலமான கண்டனத்தையும் தெரிவிப்பதாக அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சால் அதன் இணையத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரியாவுக்கு எதிராக வர்த்தக மற்றும் எண்ணெய் உற்பத்திகள் தொடர்பான கட்டுப்பாடுகளை உள்ளடக்கி மேலதிக தடைகளை விதிக்க ஜப்பானிய தலைமை அமைச்சரவை செயலாளர் யொஷிஹைட் சுகா அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்படி அணுசக்தி பரிசோதனை மூலம் வட கொரியா ஐக்கிய நாடுகள் சபையினது தீர்மானங்கள் சம்பந்தமான கோரிக்கைகளையும் சர்வதேச சட்ட விதிமுறைகளையும் மீறியுள்ளதாகவும் அந்தப் பரிசோதனைக்கு தாம் பலமான கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் தலைமைத்துவமானது பிராந்தியத்தில் தீவிரமான அச்சுறுத்தலொன்றைத் தோற்றுவித்துள்ளது எனவும் இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மற்றும் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் உடனடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக அணுஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக வட கொரியாவால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்புக் குறித்து சர்வதேச சமூகம் மிகவும் உறுதியான பதிலடியொன்றை வழங்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேசமயம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயும் வட கொரியாவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிப்பது குறித்து தொலைபேசியில் சுமார் 20 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் ஷின்ஸோ அபே அமைதியாக ஆராய்ந்து வருவதாகவும் வட கொரியாவுக்கு எதிராக எடுக்கக் கூடிய அவசியமான நடவடிக்கை குறித்து ஏனைய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவர் யுகியா அமனோ வட கொரியாவின் பிந்திய அணுசக்திப் பரிசோதனை மிகவும் வருந்தத்தக்கதாகவும் சர்வதேச சமூகத்தினால் திரும்பத் திரும்ப விடுக்கப்பட்ட கோரிக்கைகளை மீறுவதாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.