ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ‘ தனு ரொக்’ என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்பமுற்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவதானித் தோம்.
அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே அவர்களை பின் தொடர்ந்து துரத்திச் சென்று வெட்டினோம். நானும் மனோஜும் சேர்ந்தே அவர்களை தொடர்ச்சியாக வெட்டினோம்’ என பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் ஆவா குழுவின் தலைவன் நிஷா விக்டர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளான்.
வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி மேற்பார்வையில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டில் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹேவாவித்தாரண தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ள சிறப்பு விசாரணைகளிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ள விக்டர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களிடமும் , ஆவா குழுவின் பின்னணி, அதற்காக நிதிப் பங்களிப்பை வழ்னக்குவோர் குறித்து விரிவாக விசாரணை செய்யப்படுவதாகவும், அக்குழுவின் நோக்கம் குறித்தும் இதன் போது விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் மூவரை கைது செய்ய தொடர்ச்சியாக ஏற்கனவே அமைக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள் தேடுதல்களை நடாத்துவதாகவும் அவர்களை விரைவில் கைது செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
ஆவா குழுவின் உறுப்பினரும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியவர் என அடையாளம் காணப்பட்டவருமான யாழ். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் போல் என்பவரை மட்டக்குளியில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இரு நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை கோட்டையில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு விசாரணைக்கு உட்படுத்தியது. இதன் போதே ஆவா குழுவை தற்போது வழி நடாத்தும் நிஷா விக்டர் என அறியப்படும் யாழ். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சத்தியவேல் நாதன் நிஷாந்தன் என்பவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்தே நேற்று முன் தினம் காலை வேளையில் அவர் இருக்கும் இடத்தை வெளிப்படுத்திக் கொண்ட பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் புறக் கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து அவரையும், அவருடன் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வினோத் எனப்படும் ராஜ்குமார் ஜெயகுமாரையும், மனோஜ் எனப்படும் யாழ். கொக்குவில் கிழக்கை சேர்ந்த குலேந்திரன் மனோஜித்தையும் கைது செய்தனர்.
அத்துடன் யாழில் வைத்து, இனுவில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குகநாத், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் பிரசன்ன ஆகியோரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மேற்படி அறுவரிடமும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நடாத்திய விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில், தற்போது இயங்கும் ஆவா குழுவினை விக்டரே வழி நடாத்துவது உறுதியாகியுள்ளதுடன் அவர்களால் முன்னெடுக்கப்ப்ட்ட சில குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.