தொழிலாள வர்க்கத்தினரின் குறைகளை தீர்க்க வேண்டும்!

0
39

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதே தொழிலாளி வர்க்கத்தின் தாரக மந்திரம். உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உயிர்களைப் பணயம் வைத்துப் போராடியவர்கள் சிகாகோவில் மட்டுமன்றி எமது நாட்டிலும் உள்ளனர். உரிமைகளுக்காக உயிரைக் கொடுத்தவர்களும் உள்ளனர்.

தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வேலைநேரக் குறைப்பை வலியுறுத்தும் போராட்டங்கள் புரட்சியாக 18 ஆம் நூற்றாண்டில் வலுப்பெற்றன. 14 ஆம் நூற்றாண்டில் இத்தாலியிலும், 15 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸிலும் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன.

மேதினத்தின் தொடக்கத்தை இரண்டு முக்கிய புரட்சிகள் மூலம் அறிய முடிகின்றது. 1776  இல் அமெரிக்காவில் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சி; அங்கு 13 மாநிலங்களில் புரட்சி வெடித்தது. இதனையடுத்து சிகாகோ தொழிலாளர் புரட்சி 1885 இல் ஆரம்பமாகி 1886 இல் மேதினமாக முதலாம் திகதியில் முடிவுற்றுள்ளது.

எட்டு மணி நேர வேலை தொடர்பான போராட்டம் 1886 இல் சிகாகோவில் வெற்றியளித்ததோடு, மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1877 இல் சிகாகோவில் நாடு தழுவிய தொழிலாளர்கள் புரட்சி ஆரம்பமானது. அந்தப் புரட்சியில் பல உயிர்கள் பலியாகி, பலர் காயமுற்ற போதும் எந்த நோக்கத்திற்காக அந்த புரட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை.

1886ஆம் ஆண்டு மே முதலாம் திகதியில் 88,000 தொழிலாளர்களின் பங்கேற்புடன் ‘எட்டு மணித்தியாலம்’ போராட்டம் ஆரம்பமானது. 307 நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் குதித்திருந்தனர்.

அடக்குமுறை அதிகரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. புரட்சி வெடித்து இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றிகண்டது.

வருடா வருடம் மேதினம் அனுஷ்டிக்கப்பட்ட போதும் தொழிலாளர்களின் தேவைகள், உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு விட்டதா என்ற கேள்விகளோடுதான் இதுவரை மேதினமான தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

தன் உழைப்பை நாட்டின் முன்னேற்றத்திற்காக வழங்கி, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் ஏக்கங்களும் பெருமூச்சுக்களும் தொடர்கின்ற போதும் அவற்றுக்கான தீர்வுகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், தனியார்துறை தொழிலாளர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர் வர்க்கத்தினரைக் காண முடிகிறது. இவர்களில் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் உள்ளன.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களது அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படாத நிலையே காணப்படுகிறது. காடுகளிலும் மேடுகளிலும் நேரம், காலம் என பாராது அர்ப்பணிப்புடன் உழைக்கும் அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது அவசியம்.

தேர்தல் கால வாக்குறுதிகளாக மட்டுமே வீடுகளும், சொந்தக் குடியிருப்புகளும் பிரதேச பாதைகளும், மின்சாரமும் சுத்தமான குடிநீரும் இருந்து வருகின்றதே தவிர அவற்றை தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிப்பதாகத் தெரியவில்லை. சம்பள அதிகரிப்பும் இழுபறியிலேயே உள்ளது.

மேதினம் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கமும் அதன் அர்த்தமும் காண முடியாதவையாகிப் போய்விட்டன.

விவசாயத் தொழில், கைத்தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளோரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். வரட்சி, வெள்ளம், பசளைகளின் விலையுயர்வு என பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு தமது விளைச்சலை கரைசேர்ப்போர் நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. மரக்கறிச் செய்கையாளர்களின் சிக்கலும் இதுவேயாகும்.

உழைக்கும் வர்க்கத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதன் மூலமே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பதை மறந்து விடலாகாது. அனைவருக்கும் இன்றைய தினத்தில் மேதின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

(நன்றி: இணையம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here