உக்ரைன் மீது ரஷ்யா புத்தாண்டில் புதிய தாக்குதல் திட்டம்!

0
188

ரஷ்யா அண்மையில் பெரும் பின்னடைவை சந்தித்தபோதும், புத்தாண்டின் ஆரம்பத்திலேயே அந்த நாடு பரந்த அளவு தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியம், தெற்கு அல்லது தலைநகர் கீவ் மீதே இந்தத் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்று மூத்த இராணுவ ஜெனரல்கள் எச்சரித்துள்ளனர்.

தரை வழி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான ரஷ்யாவின் திறன் குறைந்து வருவதாக மேற்கத்திய தரப்புகள் கூறி வருகின்றன. இந்தப் போர் ரஷ்யாவுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த நாடு வெடிபொருட்களின் தீவிர பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாகவும் பிரிட்டனின் மூத்த இராணுவ அதிகாரியான அட்மிரல் சேர் டோனி ரடாகின் இந்த வாரம் கூறியிருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோ ஊடகத்திடம் பேசும்போது, போர்க்களத்தில் பெரும் இழப்புகளை சந்திக்கும் நிலையில் பரந்த தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் போருக்காக இணைக்கப்பட்ட 300,000 துருப்புகளில் பாதிப் பேர் தமது பயிற்சிகளை பூர்த்தி செய்யும் நிலையில் இந்த தாக்குதல் வரும் பெப்ரவரியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

“சுமார் 150,000 ஆக உள்ள அணிதிரட்டப்பட்ட படையினரில் இரண்டாவது பகுதியினர் தயார் நிலைக்கு குறைந்தது மூன்று மாதங்களை எடுத்துக் கொள்ள முடியும். இதன்படி கடந்த ஆண்டைப் போன்று வரும் பெப்வரியில் இரண்டாவது அலை தாக்குதலுக்கு முயற்சிக்கக் கூடும். அது தான் அவர்களின் திட்டம்” என்று ரெஸ்னிகோ, கார்டியன் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

“எப்படி வெற்றியை எட்டுவது என்று புதிய வழி ஒன்றை ரஷ்யா முயற்சிக்கும்” என்று குறிப்பிட்ட அவர், இதற்காக மேலும் பிரஜைகளை அணிதிரட்ட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவின் புதிய தாக்குதல் ஜனவரி விரைவில் ஆரம்பமாகக் கூடும் என்றபோதும் அது வசந்த காலத்தில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக எக்கொனமிக்ஸ் பத்திரை குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி, ஜெனரல் வலெரி சலுஸ்னி மற்றும் ஜெனரல் ஒலெக்சாடர் சிரிஸ்கி ஆகியோரின் அண்மைய நேர்காணல்களை மதிப்பீடு செய்தே அந்தப் பத்திரிகை இதனை குறிப்பிட்டுள்ளது.

“ரஷ்யா சுமார் 200,000 துருப்புகளை தயார் செய்து வருகிறது. அவர்கள் மீண்டும் ஒருமுறை கீவை நோக்கி அனுப்பப்படுவார்கள் என்பது எனக்கு சந்தேகம் இல்லை” என்று உக்ரைன் ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் சலுஸ்னி குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்மஸை ஒட்டி போர் நிறுத்தம் ஒன்றை இரு தரப்பும் நிராகரித்திருப்பதோடு, போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் எதுவும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை.

டொனட்ஸ்க் பிராந்தியம் முதற்கொண்டு உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றபோதும் குளிர்லாக இழுபறிச் சூழல் இடம்பெற்று வருகின்றது. எனினும் ரஷ்யா பக்முட் நகரை கைப்பற்ற முன்னேறி வருகிறது.

மேற்கத்திய ஆதரவுடன் ரஷ்ய ஏவுகணைக்கு எதிரான வான் பாதுகாப்பை உக்ரைன் குறிப்பிடும்படியாக மேம்படுத்தியுள்ளதோடு, மேலும் மேம்பட்ட ஆயுதங்களை அது கோரி வருகிறது.

உக்ரைனுக்கு மேலதிக நிதிகள் மற்றும் இராணுவ பயிற்சிகளை வழங்க மேற்கத்திய கூட்டணிகள் முன்வந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here