வவுனியா ஓமந்தையில் “ஆவா குழு” எனச் சந்தேகிக்கும் 16 பேர் கைது; பலர் தப்பியோட்டம்!

0
323

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், ஆவா குழுவின் பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் காவல்துறையில் நேற்றுமுன்தினம் (01) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, கோதாண்டர் நொச்சிக்குளம் காட்டுப் பகுதியில், ஆவா குழு என பெயரிடப்பட்ட பதாதைகளுடன் 40 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று (01) மாலை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனையை முன்னெடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற போது, சிலர் தப்பியோடியிருந்ததுடன், 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது அங்கு கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடனும், ஆவா குழு என பெயரிடப்பட்ட பதாதைகளுடன் பலர் ஒன்று கூடிஆயுதங்களால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களிடம் இருந்து ஆவா குழு பதாதைகள், கத்தி, வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வவுனியா மருதங்குளம், அரசன்குளம், கோவில்குளம், கோழியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம், நெளுக்குளம், ஓமந்தை, முல்லைத்தீவு, தலைமன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 18 தொடக்கம் 26 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் எனவும், இருவர் 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள், நால்வர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள், இருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.  

சந்தேகநபர்கள் ஓமந்தைப் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here