தாய்வானில்தொடருந்து விபத்தில் 36 பேர் பலி; பலர் படுகாயம்!

0
244

தாய்வானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத பாரவூர்தி ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய தொடருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்வானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் தொடருந்து, ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கிய போது விபத்தில் சிக்கியது.

திடீரென தடம்புரண்ட தொடருந்து, சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. இதனால் தொடருந்துப் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. உள்ளே இருந்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கூக்குரலிட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தடம்புரண்ட தொடருந்துக்கு அருகில் பாரவூர்தி ஒன்றின் சிதைந்த பாகங்கள் கிடந்தன. சரியாக பார்க்கிங் செய்யப்படாத பாரவூர்தி ஒன்று சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த பாரவூர்தி மீது மோதியதால் தொடருந்து தடம்புரண்டிருக்கலாம் எனவும் அந்நாட்டு தொடருந்து சேவை நிர்வாகம் கூறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here