திருக்கோவில் உமிரியில் மீண்டும் இல்மனைற் அகழமுயற்சியா? “தீக்குளிப்போம்” என மக்கள் எதிர்ப்பு!

0
202

அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இல்மனைற் அகழ்வதற்கான களவிஜயத்தை மேற்கொண்டுவந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் பாரிய எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அதனால் அப்பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை திருக்கோவில் உமிரிப்பகுதியில் இடம்பெற்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் மற்றும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளமுகாமை திணைக்களம், கரையோர பாதுகாப்புத்திணைக்களம், மீன்பிடித்திணைக்களம், கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திணைக்களம், வனபரிபாலனதிணைக்களம், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களின் உயரதிகாரிகள் திங்கள் காலை 9 மணியளவில் உமிரிப்பகுதிக்கு 9 வாகனங்களில் வந்திறங்கினர்.

இல்மனைற் அகழ்வுக்கு பொறுப்பான தம்சிலா எக்ஸ்போர்ட் கம்பனி நிருவாகிகளும் சமுமளித்திருந்தனர். சிறிலங்கா கடற்படையினரும் வந்திருந்தனர்.

அங்கு இல்மனைற் அகழ்வதற்கான சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்காக இக்குழுவினர் வந்திருப்பதாக தகவல்கள் காட்டுத்தீபோல் பரவியது.

ஒருசில நிமிடங்களில் திருக்கோவில் பிரதேசபைத் தவிசாளர் எ.டபிள்யு.கமலராஜன் அங்கு வந்துசேர்ந்தார் பொதுமக்களும் குவியத்தொடங்கினர்.

தவிசாளர் கமலராஜன் வந்து தனது எதிர்ப்பை தெரிவித்து அதிகாரிகளிடம் இவ்வாறு கூறினார்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு எமது பிரதேசத்திற்கு அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுவந்து எமக்குத்தெரியாமல் இல்மனைற் அகழ்வுப்பணிக்கான ஆரம்பவேலையை மேற்கொள்ளத் தலைப்பட்டனர்.

அப்போது பொது மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்ப்புத்தெரிவித்தனர். அதுமட்டுமல்ல மணிக்கூட்டுக்கோபுரத்திலிருந்து பாரிய எதிர்ப்பு மழைக்கு மத்தியில் ஊர்வலத்தை நடாத்தி பிரதேசசெயலரிடம் மகஜரும் கையளித்தோம். அத்துடன் அத்திட்டம் கைவிடப்பட்டது.

திருக்கோவில் பிராந்தியத்தில் இல்மனைற் அகழ்வதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எமதுசபையிலும் எதிர்ப்புத்தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம்.

கடந்தவருடம் கொழும்பில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளமுகாமை திணைக்கள ஏற்பாட்டில் கூட்டமொன்று நடைபெற்றது. அதற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

அங்கு மீண்டும் இல்மனைற் அகழ்வது தொடர்பில் பேசப்பட்டது. அந்ந இடத்தில் நான் எமது மக்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்து அதனை முழுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தேன். அத்தோடு அது முடிந்தது.

இந்நிலையில் எனக்குத்தெரியாமல் மக்களுக்கு அறிவிக்காமல் இங்கு இன்று மீண்டும் வந்து செய்கின்ற வேலைக்கு நான் பூரண எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன்.

எந்தக்காரணம்கொண்டும் திருக்கோவில் பிரதேச கனியவளத்தை சூறையாட அனுமதிக்கமாட்டேன் என்றும் கூறினார்.

சபைத்தீர்மானக்கொப்பியை மேலதிக அரசஅதிபர் தொடக்கம் உயரதிகாரிகளிடம் அவர் கையளித்தார்.

அதனிடையே அங்கு வந்த பொதுமக்கள் சிங்களத்திலும் தமிழிலும் மாறிமாறி உரக்கக்குரல்கொடுத்தனர். அவர்கள் கூறியதாவது:

எமது கடலோரவளங்களை இழக்க நாம் தயாரில்லை.இல்மனைற் அகழ்ந்தால் எமது நிலத்தடிநீர் உவர்நீராகும்.இங்குள்ள தென்னைமரங்கள் தொடக்கம் சகல பயிர்பச்சைகளும் கருகும். புல்மோட்டை நல்ல உதாரணம். மற்றது கடலரிப்பு நடக்கும். ஏற்கனவே ஒலுவில் துறைமுகம் கட்டியதனால் இப்பிராந்தியம் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. எமது திருக்கோவில் முருகனாலயமும் பாதிக்கப்பட்டது. எனவே இன்னமும் நாம் பாதிக்கப்பட விரும்பவில்லை. இங்கு இல்மனைற் அகழவேண்டாம். அதைமீறிச்செய்யமுற்பட்டால் நாம் தீக்குளிப்போம் என உரக்கக்கத்தினர்.

மேலதிக அரசஅதிபர் வே.ஜெகதீசன் நிலைமையை சமாளித்து அங்கு கூறுகையில்:

மக்களது சம்மதம் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காது. இது ஒரு களவிஜயம் மட்டுமே. இதற்கான அறிக்கைகளை நாம் தனித்தனியாக அனுப்பவேண்டும். அதன்பிறகுதான் முடிவெடுக்கப்படும்.உங்களது எதிர்ப்பை கட்டாயம் நாம் தெரிவிப்போம். உங்களை மீறி எதுவும் நடக்காது.

உங்களுக்கு சேவை செய்யவே நாம் இருக்கிறோம்.எனவே மக்களுக்கு பாதகமாக எதுவும் நடக்காது.எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் மக்களுடனான பகிரங்கக்கூட்டம் நடாத்தப்படும் என்றார்.திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரனும் அதேபாணியில் விளக்கமளித்தார்.

அத்துடன் பிரச்சினை தீர்ந்தது. மக்கள் கலைந்தனர்.

இந்த இல்மனைற் அகழும் திட்டத்தின்கீழ் அம்பாறை கரையோரத்தில் 46 கி.மீற்றர் தூரம் ஒலுவில் தொடக்கம் உமிரி வரை இல்மனைற் அகழப்படவுள்ளது. அதன்முதற்கட்டமாக உமிரியில் 0.6 கி.மீற்றர் தூரம் அகழ்வதற்கான களவிஜயமே இதுவெனத் தெரியவருகிறது.

(நன்றி :தினக்குரல்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here