வவுனியாவில் முன்னாள் போராளி மீது விசமிகள் தாக்குதல்!

0
387

வவுனியாவில் முன்னாள் போராளி  மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) திங்கட்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த அவர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியும்,சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான வி.விநோதரன் (ஈழம்) என்பவர் மீதே குறித்த கும்பலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உட்புகுந்த மர்மநபர்கள் முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியதுடன் அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

முன்னாள் போராளி மீதான தாக்குதல் தொடர்பாக அயலவர்களால் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதுடன், நோயாளர் காவுவண்டி மூலம் படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வவுனியாவில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி வன்னிப் பகுதி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் ஊடாக மனிதாபிமான சேவைகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here