மன்னார் தீவகம் எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்கும் அபாயம்!

0
452

கட்டுப்பாடு எதுவுமின்றி  தொடரும் மணல் கொள்ளை

மன்னார் மாவட்டத்தின் தீவகப் பகுதியில் இருந்து தற்போது அதிகளவான மணல் உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்களால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மன்னார் தீவகப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1 தொடக்கம் 10 மீற்றர் வரையான அளவு கீழே அமைந்துள்ளது. மன்னார் கடல் எல்லைப் பகுதிகளை சூழ்ந்துள்ள மணல் மேடுகளும் பவளப் பாறைகளுமே மன்னார் தீவுப் பகுதிக்குள் கடல்நீர் இதுவரை காலம் உட்புகாமலும் சுனாமி போன்ற பேரனர்த்தங்கள் தாக்காமலும் பாதுகாத்து வருகின்றன.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாழ்வுபாடு, தோட்டவெளி பேசாலை, நடுக்குடா, தலைமன்னார் போன்ற கிராமப் பகுதிகளில் அதிகளவான மணல் மற்றும் மண்திட்டுகள் காணப்படுகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் சில இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பகுதிகளில் துளையிட்டு மண் திட்டுக்கள் மற்றும் மணல் தொடர்பாக உள்ளூர் கனியவள திணைக்களத்திடமோ பிரதேச செயலகத்திடமோ அனுமதி பெறாமல் நேரடியாக மத்திய அரசின் அனுமதியுடன் ஆய்வுகளை மேற்கொண்டதாக அறிய முடிகின்றது.

அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் 264.93 மெற்றிக் தொன் கனிய வளம் இருப்பதாகவும் அவற்றில் குறிப்பாக விண்ணுந்து தயாரிக்க பயன்படும் தைத்தானியம் மற்றும் இல்மனைற் போன்ற விலை உயர்ந்த கனிய வளங்கள் உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் தைத்தானியம் நிறைந்துள்ள மணலை அகழ்வு செய்யும் செய்தி பரவியது.அதனைத் தொடர்ந்து மன்னார் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் குறித்த விடயம் அமைதியீனத்தை ஏற்படுத்தியது.

குறித்த ஆய்வில் 3704 வெவ்வேறு பகுதிகளில் ஆழமாக துளையிட்டு மணல் அகழ்வு செய்யப்பட்டு ஆய்வு இடம்பெற்றுள்ளதாகவும் மணல் அகழ்வு செய்து ஆய்வு மேற்கொள்ள எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி ஆய்வு மற்றும் அகழ்வில் உண்மைத் தன்மை இதுவரை மர்மமாகவே உள்ளது.

மன்னார் தீவக பகுதியில் மணல் அகழ்வு என்பதோ மணல் ஏற்றுமதி என்பதோ மன்னார் மக்களுக்கு பாதிப்பு நிறைந்ததாகும்.

இது ஒருபுறம் இருக்க மன்னார் நகர் பிரதேச எல்லைக்குள் உள்ள தீவக பகுதிக்குள் சில நபர்கள் சுயதொழில் நடவடிக்கை என்ற போர்வையில் நண்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்புக்கு என்றெல்லாம் அரச காணிகளை பெற்று பாரிய கிடங்குகளை அமைத்து அவற்றை அகழ்வு செய்யும்போது கிடைக்கின்ற பாரிய அளவிலான மணலை மணல் விற்பனை முகவர்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகளினால் உண்மையாகவே சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனிக்கும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் சில பகுதிகளில் அரச அபிவிருத்தி திட்டங்கள் என்ற அடிப்படையில் நடைபெறும் பாரிய செயற்திட்டங்களுக்கு ஆழமாக குழிகள் தோண்டப்பட்டு கொங்கிறீட் இடப்பட்டு குழிகள் அனைத்தும் மூடப்படுகின்றன.

அந்தக் குழிகளில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மணலுக்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக ஒழுங்கான தெளிவு இல்லை. அவ்வாறு அகழப்படும் மணல் அனுமதி இன்றி வெளி இடங்களுக்கு அனுப்பப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் தீவக பகுதிகளை அண்டிய பகுதிகளில் உள்ள கடல் தொடர்ச்சியான காற்று மற்றும் கடல் அலை காரணமாக முன்னோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் இவ்வாறாக இடம்பெற்று வருகின்ற மணல் அகழ்வுகள் காரணமாக தீவக பகுதி இன்னும் சில வருடங்களில் கடல் நீரினால் மூடப்படும் அபாயம் உள்ளது.

எனவே சாதாரண ஒரு மணல் அகழ்வு என்று தீவக பகுதிகளில் இடம்பெறும் இவ்வாறான வளச் சுரண்டல்களை கடந்து சென்று விட முடியாது.

தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற இவ்வாறான மணல் அகழ்வுகள் நிறுத்தப்படுவதுடன் மக்கள் தங்கள் பகுதிகளில் இடம்பெறும் மணல் அகழ்வுகள் தொடர்பாக விழிப்புடன் செயற்படுவதே பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.

அதேநேரத்தில் வளங்கள் அனைத்தும் அகழப்படுதல், வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லுதல் தொடர்பான ஒரு வெளிப்படதன்மையான கட்டமைப்பு உருவாக்கப்படாவிடின் மணல் கொள்ளைகள் தடுக்க முடியாத சாபக்கேடாகவே தொடரும்.

எனவே மக்களின் வரிப்பணத்தில், அரச சம்பளத்தில் கடமைகளை மேற்கொள்ளும் அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(கொழும்பு ஊடகம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here