யாழில் இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த முகநூல் செய்தி!

0
466

முகநூலில் வெளியான போலித் தகவலால் மனவிரக்தியடைந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு சாவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் ஏ-9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள், சாவகச்சேரி பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாவகச்சேரியில் உள்ள புகைப்பரிசோதனை நிலையம் ஒன்றில் பணிபுரியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த இராசு தீபன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.
குறித்த நபர் தொடர்பில் நேற்றுமுன்தினம் முகநூல் ஒன்றில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், புகைப்பட ஆதாரங்களும் அதில் பதிவிடப்பட்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட மன விரக்தியே இவர் தற்கொலை செய்துகொள்ளக் காரணமாக இருக்கலாம் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த முகநூலில் உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இன்று முகநூல்களில் போலியான தகவல்கள் ஏராளம் வருகின்றன. ஆனால், பலரும் அதன் விளைவுகளை உணராமல் பகிர்வதிலேயே குறியாக இருக்கின்றனர். உண்மையான ஊடக தர்மம் தெரிந்தவர்கள் இடுகை இடுவதற்கு முதல் சிந்திப்பார்கள். இன்று கொரோனாவின் உள்ளிருப்பு பல அவசர செய்தியாளர்களையும் தான் உருவாக்கியுள்ளது. இவர்கள் வெறும் ‘லைக்’ (விருப்பம்) மட்டும் எடுக்கவில்லை. அப்பாவிகளின் உயிர்களையும் தான் எடுக்கின்றார்கள். தயவுசெய்து ஒரு இடுகையை இடுவதற்கு முன் மூன்று தடவை சிந்தியுங்கள். பல உயிர்கள் காக்கப்படும்.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here