தமிழ் நாட்டில் மதுப்போத்தலுக்காக சகோதரியைக் கொன்ற ஈழத்தமிழர்!

0
825

ஈழத்தில் இருந்து ஐயப்பன் மாலை போட இந்தியா சென்ற ஈழத் தமிழர், அங்கு வாழ்ந்து வந்த அக்காவைக் குத்திக் கொன்றுள்ளார். மதுப் போத்தலை மறைத்து வைத்ததாக கூறியே இந்தக் கொலை நடந்துள்ளது.

சென்னை வளசரவாக்கம் வேலன் நகர் 4வது தெருவில் வசித்து வந்தவர் தாரகேஸ்வரி (56). தாயகம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில வருடங்களாக சென்னையில் தனது தாய் வேதநாயகி (80), மகன் ஆதிசன்(32) ஆகியோருடன் வசித்து வந்தார்.

தாரகேஸ்வரியின் தம்பி குகதாசன்(49). இவர், சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்ததால் இலங்கையில் இருந்து கடந்த 13ஆம் திகதி சென்னை வந்தார். பின்னர் சபரிமலைக்கு சென்றுவிட்டுத் திரும்பிய குகதாசன், தனது அக்கா தாரகேஸ்வரி வீட்டில் தங்கி இருந்தார்.

குகதாசனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. சபரிமலைக்கு சென்றுவிட்டு வந்தவுடன் மீண்டும் மது குடிக்கத் தொடங்கினார். நேற்று முன்தினம் 2 மதுப் போத்தல்களை வீட்டுக்கு வாங்கி வந்தார். அதில் ஒரு போத்தல் மதுவை குடித்துவிட்டு மற்றொரு போத்தலை வீட்டில் மறைத்து வைத்து இருந்தார்.

பின்னர் இரவில் மீண்டும் மது குடிப்பதற்காக தான் மறைத்து வைத்த மதுப் போத்தலை தேடியபோது மாயமாகி இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தனது அக்கா தாரகேஸ்வரிதான் மதுப் போத்தலை எடுத்து மறைத்து வைத்து இருப்பதாக நினைத்து அவரிடம் கேட்டார். ஆனால் தாரகேஸ்வரி, தனக்கு அதுபற்றி தெரியாது என்றார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த குகதாசன், வீட்டில் இருந்த கத்தியால் தனது அக்கா தாரகேஸ்வரியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்து தடுக்க முயன்ற தாரகேஸ்வரியின் மகன் ஆதிசன், தாய் வேதநாயகி ஆகிய இருவரையும் குகதாசன் கத்தியால் குத்தினார். இதில் இருவரும் காயமடைந்தனர்.

இவர்களின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். இரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தாரகேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த ஆதிசன், வேதநாயகி இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குசென்று கொலையான தாரகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் இருந்த குகதாசனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தாரகேஸ்வரியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

குடிபோதையில் மதுப் போத்தலை மறைத்து வைத்ததாக கூறி அக்காவை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here