புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் கொலையை கண்டித்து யாழ் இளைஞர்கள் போராட்டம்!

0
264

yarl 1

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் கொலையை கண்டித்து யாழ் இளைஞர்கள் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது
இப் போராட்டம் (17) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நல்லூர் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க கோரியும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரியுமே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது..
பெண்ணியத்தை காப்பதோடு இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராதவாறு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதை வலியுறுத்தியுமே இப் போராட்டம் தொடரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது தூக்கிலிடு தூக்கிலிடு கொடூரர்களை தூக்கிலிடு, ஆஜராகாதே ஆஜராகாதே குற்றவாளிக்காய் ஆஜராகாதே, தண்டனைகளை அதிகரி குற்றங்கள் குறையும் உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர்.
இது தொடர்பாக மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.
போராட்ட நிறைவில் கால்நடையாக முதலமைச்சரின் வீட்டிற்குச் சென்ற போராட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகள்டங்கிய மகஜரை கையளித்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடமும் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக நாளை( 18) ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடமும், ஆளுனரிடமும், வடபிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமும் மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.
மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தில் கடந்த புதன்கிழமை பாழடைந்த வீடொன்றில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி இளைஞர் சமூகத்திடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.yarl 2
இது போன்ற சம்வங்கள் தொடர்ந்தும் இடம்பெறமலிருபதற்காக நாம் இதனை கண்டிக்கின்றோம்.,
பல்வேறு கனவுகளோடு பள்ளி சென்ற மாணவிக்கு ஏற்பட்ட இந்த நிலை முழுத் தமிழினத்தையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக தமிழன் என்பதாலேயோ என்னவோ தொடர்ச்சியாக பல மாணவிகள், பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் இன்று வரை நீதி கிடைக்காது தமிழர்கள் புலம்புவதுமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
சட்டமும் ஒழுங்கும் சீராக செயற்படுகின்றதா என்னும் வினா எலோரிடத்தும் சகஜமாக எழுத்துள்ளது.
புங்குடுதீவிலே சாரதாம்பாள், செம்மணியிலே கிருஷாந்தி, காரைநகரில் பள்ளி செல்லும் மாணவி கடற்படையால் குதறப்பட்டமை, பருத்தித்துறையில் ஒரு பாடசாலை மாணவி, என இன்னும் பலவோடு இப்பொழுது மீண்டும் இப் புங்குடுதீவு மாணவி என நீளும் இப் பட்டியலுக்கு நீதித்துறை என்ன செய்திருக்கின்றது.
குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்தும் உச்சபட்ச தண்டனை வழங்காமையால் தான் இவை தொடர்வதாக நாம் உணர்கின்றோம்.
2009ற்கு முற்பட்ட காலங்களில் நட்ட நடு இரவில் கூட யாரும் எங்கும் செல்லக்கூடிய சூழல் இருந்ததை எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதோடு இதை சர்வதேசமும் உணர்ந்துள்ளது. காரணம் சட்டம் மிக இறுக்கமாக இருந்தது என்பதோடு சட்டம் ஒழுங்கு மக்கள் நலனில் அக்கறை கொண்ட முறையான தலமையும் இருந்ததை சொல்லியாக வேண்டும்.
பொலிஸ் மற்றும் இராணுவம் கடற்படை என பாதுகாப்பு தப்பினர் வடக்கில் நிறைந்துள்ள சூழலில் தொடர்ச்சியாக தமிழ்ப்பெண்கள், மாணவிகளின் கொலைகள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளதுடன் வடக்கில் காணப்படும் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் சம்பந்தமாக காவல்துறை எடுக்கின்ற நடவடிக்கைகளில் மீது கேள்வி எழுந்துள்ளது.
இந் நிலையில் இத்தகைய கொடுரமான வெறித்தனமான குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படும் சம்பவங்களால் வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது..
ஆகவே இவை உடனடியாக கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு குறிப்பாக இளம் பெண்கள் மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், குற்றவாளிகள் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்நிறுத்தி வழங்கப்படக் கூடிய உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமென தங்களை வேண்டிநிற்கின்றோம்.
அத்தோடு வழங்கப்படும் தண்டனை இதுவே இவ்வாறான சம்பவத்தின் இறுதி அத்தியாயமாக அமைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு தங்களை வேண்டிநிற்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here