“ஊடகப்படுகொலைகளிற்குநீதிகோரிப் பயணிக்கும் காலம்” எனும் பிரகடனம்!

0
188

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட ஒக்டோபர் 19 முதல் நவம்பர் 19 வரையிலான ஒரு மாத காலம் ஊடகப் படுகொலைகள், காணாமல் ஆக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக நீதி கோரி பயணிக்கும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு ஊடக அமைப்புக்கள் இணைந்து இந்த பிரகடனத்தை வெளியிட்டுள்ளன.

யாழ். ஊடக அமையம், வவுனியா ஊடக அமையம், முல்லைதீவு ஊடக அமையம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஊடக அமைப்புக்கள் இணைந்து இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையில், மாறி மாறி ஆட்சிக் கதிரையிலிருந்த ஆட்சியாளர்கள் தமது தமிழ் மக்களிற்கு எதிரான இன விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகளை தொடர்ந்தும் கட்டவிழ்த்தே வந்திருந்தனர்.

அதிலும் 2000ஆம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது கொலை கலாசாரம் இன்று வரை தொடர்கின்றது.

தான் நேசித்த மக்களுக்காகவும், ஊடக சுதந்திரத்திற்குமாக தனது இன்னுயிரை ஈந்த சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளை நோக்கி நீதி கிட்டாத நிலையில் காலம் கடந்து செல்கின்றது.

தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாளாக மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட ஒக்டோபர் 19ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்றது.

நிமலராஜனுடன் அரங்கேற்றப்பட்ட ஊடகப்படுகொலைகள் 43இற்கும் அதிகமான நண்பர்களை இழக்க வைத்து அநாதரவாக எம்மை விட்டிருக்கின்றது. அதிலும் 2005 முதல் 2010 வரையான ஆட்சிக்காலத்தில் கொலைகள், காணாமல் போதல்கள் உச்சமடைந்திருந்தது. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் ஊடக தொழிலிருந்தோ அல்லது நாட்டிலிருந்தோ வெளியேற வேண்டி ஏற்பட்டிருந்தது.

ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் இன வேறுபாடின்றி உண்மைகளை நேசித்தமைக்காக தாக்கப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டிருந்தனர்.

மாறி மாறி ஆட்சியிலிருந்த எத்தரப்பும் ஊடகவியலாளர்களை கொன்றவர்களை, ஊடகவியலாளர்களை காணாமல் ஆக்கியவர்களை குற்றவாளி கூண்டிலேற்ற தயாராக இருக்கவில்லை.

ஓப்புக்கு பெரும்பான்மையினரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடக நண்பர்கள் இருவர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அது கூட இழுபறிப்பட்டே செல்கின்றது.

அதிலும் நல்லாட்சி என ஆட்சிக்கதிரையேறியவர் தனக்கு 800 கோடி வீட்டுடன் செல்கின்றார். அவரை ஆட்சிக் கதிரையேற்ற பாடுபட்ட ஊடகங்களை கூட அநாதரவாக கைவிட்டே செல்கின்றார். இன்னொருபுறம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் போதாதிருப்பதாக சொல்கிறார்கள்.

நல்லாட்சி காலத்திலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல்கள் இல்லாது போயிருந்த போதும் ஊடக அடக்குமுறைகளும் நெருக்குவாரங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

மீண்டும் தேர்தல் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமது கறைபடிந்த கைகளை மறைத்தவாறு பல கொலையாளிகளும் முன்னேவரத் தொடங்கியுள்ளனர். நடந்தவை பற்றி அவர்களில் பலரும் மறந்துவிட்டனர்.

இந்நிலையில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட ஒக்ரோபர் 19 முதல் நவம்பர் 19 வரையிலான ஒரு மாத காலத்தை ஊடகப் படுகொலைகள், காணாமல் ஆக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கான நீதி கோரி பயணிக்கும் காலமாக வடக்கு ஊடக அமைப்புகளாகிய நாம் பிரகடனப்படுத்துகின்றோம்.

ஆட்சியாளர்களிடமும், சர்வதேசத்திடமும் நீதி கோரும் எமது பாதையினை மக்கள் மயப்படுத்த நாம் நேசிக்கும் மக்களிடமே செல்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here