மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை வீதியில் வந்தாறுமூலை மாரி அம்மன் கோவிலுக்கு முன்பாக நேற்று (02) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நோக்கி உந்துருளியில் பயணித்த இருவர், அதே திசையில் பயணித்த மகிழுந்தை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில், குறித்த மகிழுந்துடன் மோதியதோடு, எதிர்த்திசையில் வந்த சிற்றுந்தொன்றுடனும் மோதி விபத்திற்குள்ளாகினர்.
இவ்விபத்தில் உந்துருளியை செலுத்திச் சென்றவர் மற்றும் உந்துருளியில் பின் இருந்து பயணித்த இருவரும் படுகாயமடைந்ததை தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் உந்துருளியின் பின்னால் இருந்து பயணித்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, செங்கலடியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தை தொடர்ந்து மகிழுந்து மற்றும் சிற்றுந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.