தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியவர் மாமனிதர் ஜெயக்குமார்!

0
899

மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது வழங்கி கெளரவித்தார் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள். 

“கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலிலே மூழ்கிக்கிடக்கிறது. திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் அழகு. அவர் உதிரும் மந்திரப் புன்னகை அந்த அழகிய ஆளுமையை அணிசெய்தது. இதுவே, அனைவரையும் அவரை நோக்கிக் காந்தமாகக் கவர்ந்திழுத்தது. இவர் ஒரு சிறந்த தேசப்பற்றாளர். அவுஸ்திரேலிய மண்ணில் தளமிட்டு நின்றபோதும், தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணை அவர் ஆழமாக நேசித்தார். சிங்கள அதிகார வர்க்கம் தனது இராணுவ அடக்குமுறைப் பாதையைக் கைவிட்டு, தமிழ் மக்களுக்கு என்றுமே ஒரு நீதியான தீர்வை வழங்கப்போவதில்லை என்பதை அவர் ஆழமாக உணர்ந்தவர். விடுதலையின் பாதையில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என்பதை அனுபவ ரீதியாகப் பட்டறிந்தவர். இந்தச் சிந்தனைத் தெளிவும் பட்டறிவும் அவரிடம் விடுதலைத் தீயைப் பற்ற வைத்தது. அவரும் எமது விடுதலை இயக்கத்தோடு ஒன்று சேர்ந்து, போராட்ட வாழ்வில் முழுமையாக மூழ்கினார். கடல்கள் தாண்டி, கண்டனங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூர தேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் இவர் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். அவுஸ்திரேலிய நாட்டின் அரசியல் போக்கையும் சட்ட நடைமுறைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, தமிழீழ தேச விடுதலைக்கான போராட்டப் பணிகளைச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் முன்னெடுத்தார்.

அங்கு வாழும் எம்மக்கள் மத்தியில் தமிழ்ப்பற்றையும் இனப்பற்றையும் ஊட்டிவளர்த்து, போராட்ட விழிப்புணர்வைத் தூண்டி, எமது போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களை அணிதிரட்டினார். அவுஸ்திரேலிய மண்ணில் தமிழ்க்குரல் வானொலி தோற்றம் பெறுவதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பல்வேறு நாடுகளில் தனது கிளைகளைப் பரப்புவதற்கும் துணை நின்றவர். இவர் ஆரவாரமின்றி, அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி என்றும் போற்றுதற்குரியவை.

திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். தேச விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. எமது நெஞ்சத்து நினைவலைகளில் அவர்கள் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்கள்.”

– தமிழீழத் தேசியத் தலைவர்  

அவரின் மறைவு குறித்து 2007 ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழநெடுமாறன் ஐயா விடுத்துள்ள இரங்கல் அறிக்கை இது.

“தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றிப் பாதையில் விரைந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமாரின் திடீர் மறைவு பேரிழப்பாகும்.”

உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழநெடுமாறன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையின் விபரம்:

“தென்துருவ நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிய ஜெயக்குமாரின் திடீர் மறைவு அனைவரையும் அளவிலா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றிப் பாதையில் விரைந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் அவரின் மறைவு பேரிழப்பாகும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களை விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத் திரட்டியவர் மறைந்திருக்கிறார். காலமெல்லாம் கடமையாற்றிய அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.”

என தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here