மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

0
1419

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்”மாமனிதர்” கி.சிவநேசன் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

மார்ச் 6, 2008 வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலில் சிவனேசனின் வாகான ஓட்டுநர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பவரும் கொல்லப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு

தமிழீழத்தின் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
07.03.2008.

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் ஒருவரை இன்று சிங்களம் அழித்துவிட்டது. தமிழினக்கொலைப் பரிமாணத்தின் உச்சமாக திட்டமிட்ட இந்தக் கோரக்கொலை நிகழ்ந்திருக்கிறது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் அசிங்கமான வடிவமாக வன்னி மண்ணிலே இந்தக் கொடுமை அரங்கேறியிருக்கிறது.

திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள் சுயநலம் கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் செயற்பட்ட தனித்துவமான மனிதர். உயர்ந்த உள்ளம் கொண்ட எளிமையான மனிதர். புனிதமான அரசியலாளர். தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்ளும் ஒரு உயரிய பண்பாளர்.

இவர் தமிழீழ மண்ணின் விடிவையும் தமிழீழ மக்களின் விடுதலையையும் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துக்கொண்டவர். தமிழ் மக்கள் தமது சொந்தத் தாயக மண்ணில் இன்னல்கள் நீங்கி, இடர்கள் அகன்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழவேண்டும் என ஆவல் கொண்டவர். தமிழீழ மண்ணை ஆழமாக நேசித்தவர். அந்த மண் ஒரு சுதந்திர தேசமாக மலர்வதைக் காணத் துடித்தவர். இந்தத் துடிப்பில் உயிர்ப்புப்பெற்று, எமது விடுதலை இயக்கத்தையும் அதன் அரசியல் இலட்சியத்தையும் அதனை அடைவதற்கு நாம் நெறித்துள்ள போராட்டப் பாதையையும் முழுமையாக ஏற்றுப் பெரும் விடுதலைப் பணியாற்றியவர்.

யாழ். மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றப் பெரும் பொறுப்பைச் சுமந்தவாறு உலகெங்கும் அலைந்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நியாயம் தேடினார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எமது போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டினார். சிங்கள அரசும் அதன் ஆக்கிரமிப்புப் படைகளும் எமது மண்ணில் நிகழ்த்தும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் உலகத்திற்கும் ஊடகங்களுக்கும் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்களப் படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துப் போராடினார். கடும் உழைப்பாலும் செயற்றிறனாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.

திரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here