பருத்தித்துறை கடற்பரப்பை அண்மித்த இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 37 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம், அக்கரைபேட்டை பகுதியை சேர்ந்த 37 இந்திய மீனவர்கள் பருத்தித்துறையை அண்மித்த காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று சனிக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
நீரியல் வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்ப்படுத்தினர். இதன்போது, இவர்கள் அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை, இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் அறுவர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


