சிறிலங்காவில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையிலான கருத்து வெளியிடும் நபர்களுக்கும் அவ்வாறான செய்திகளை பிரசுரிக்கும் நபர்களுக்கும் இரண்டுவருட சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
இதற்கேற்ப, குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்குள் இது குறித்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இனவாதம் மற்றும் மதவாதம் என்பன அதிகரித்ததாக குறிப்பிட்ட அவர், இன மற்றும் மதம் சார்ந்த குரோத கருத்துக்களால் இனங்களிடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். இதனை தடுப்பதற்காகவே இந்த சட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், இன, மத, விரிசலை ஏற்படுத்த உதவும் வகையில் கருத்து வெளியிடுவது இதனூடாக தடுக்கப் படுவதாகவும் குறிப்பிட்டார்.