நாட்டில் நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
13 மாவட்டங்களைச் சேர்ந்த 27,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த 2000-ற்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால், ஆனந்தபுரம் கிழக்கு மற்றும் இரத்தினபுரம் கிராமங்களின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கில் 25 குடும்ங்களைச் சேர்ந்த 77 பேரும் இரத்தினபுரம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுகம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்களின் வீடுகளுக்கு வெள்ளம் சென்றமையினால் நேற்றிரவு(07) முதல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சீரான வடிகாலமைப்பு வசதிகள் இன்மையால் வெள்ள நீர் வழிந்தோட முடியாத நிலையில் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
200 குடும்பங்களுக்கான உணவு மற்றும் குடிநீர், பிஸ்கட் போன்றவற்றை கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி நகர சுயேச்சைக் குழு உறுப்பினர் வழங்கியுள்ளார்.
அத்துடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – நித்தகைக்குளம் உடைப்பெடுத்தமையால், வௌ்ளத்தில் சிக்குண்ட ஆறு பேர் இன்று காலை உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
நித்தகைக்குளத்திலுள்ள வயல் காவலுக்காக சென்றிருந்த போது, கடந்த 3 நாட்களாக சிக்குண்டிருந்த மக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
நித்தகைக் குளம் உடைப்பெடுத்தமையால் சுமார் 1000 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் முல்லைத்தீவிலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையினால் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 30 அடியாக உயர்வடைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தின் மடு – வவுனியா பிரதான வீதியில் தம்பனை பகுதியில் வௌ்ளம் பாய்வதால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, வந்தாறுமூலை, தளவாய், சவுக்கடி, மயிலம்பாவௌி ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.
சித்தாண்டி ஈரலக்குளம் கிராமத்திற்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக செங்கலடி பிரதேச செயலகத்தினால் படகு சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சீரற்ற வானிலையால் செங்கலடி பிரதேச செயலகத்தில் சுமார் 4000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் என்.வில்வரத்தினம் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
மூதூர் மணிக்கூட்டுக் கோபுரச்சந்தியினை ஊடறுத்து வௌ்ளம் பாய்வதால் மூதூர் – சம்பூருக்கான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
கட்டைப்பறிச்சான் இறால் பாலத்தினை மேவி வௌ்ளம் பாய்வதால் அம்மன் நகர், கணேசபுரம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வௌ்ள அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பிலான கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.