தமது தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ அல்லது அரைகுறைத் தீர்வைத் தம்மீது திணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் விடுதலை வீரர்களின் நினைவேந்தலில் மக்கள் மன நிறைவு காண எத்தனித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாள் மக்கள் எழுச்சி தொடர்பில் அவரிடம் கேட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது: மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டனர். இதேவேளை தமது உரித்துக்கள் என்ன என்பதையும் அவர்கள் உணரத் தொடங்கியுள்ளதாகவே கருதுகின்றேன்.
மாவீரர் தின நிகழ்ச்சிகள் துயிலும் இல்லங்களில் மட்டும் நடைபெறவில்லை. கோயில்களில், குடும்ப இல்லங்களிலும் தீபச் சுடர் ஏற்றி விடுதலை வீரர்களுக்கு மக்கள் வீர வணக்கம் தெரிவித்துள்ளனர். மாவீரர்களை மலினப்படுத்துவதே மக்களின் மனோநிலையாக இருந்திருந்தால் இவ்வளவு உணர்வபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் அனுஷ்டித்திருக்கமாட்டார்கள்.
முன்னைய வருடங்களிலும் பார்க்க இம்முறை உணர்வலைகள் அதிகரித்துள்ளன. இதற்கான காரணங்கள் இரண்டுள்ன. உள்ளேயிருந்த உணர்ச்சிகளை இது வரை மக்கள் அடக்கி வைத்திருந்தனர். ஆனால் இப்போது தமது உணர்ச்சிகளை ஊர் அறிய, உலகறிய மக்கள் வெளிக்காட்டியுள்ளனர். மற்றைய காரணம் மக்களிடையே பயம் பிறந்துள்ளமையாகும். எமது அபிலாசைகள், அடிப்படை வேண்டுதல்கள் நிறைவேறாதா என்ற பயமே அது.
இதனாலேயே விடுதலை வீரர்களின் நினைவேந்தலில் மக்கள் மன நிறைவு காண எத்தனித்துள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.