நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.
211 நாளான நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்த ஜேர்மனிய சட்டத்தரணியிடமே அவா்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனா்.
அவா்கள் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தின் போதும் யுத்தம் நிறைவுற்ற பின்னரும் எங்களுடை உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனா் இவா்களில் பலா் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனா். எனவே எமக்கு எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் அந்த நீதியானது சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே சாத்தியமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கான அலுவலகம் ஏதனையும் செய்யாது எனவும் நாட்டின் ஜனாதிபதியால் நேரடியாக யாழ்ப்பாணத்தில் வைத்து எங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியே இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே நாட்டின் ஜனாதிபதியின் உறுதிமொழியே நிறைவேற்றப்படாத நிலையில், அலுவலகமொன்றினால் எதனை மேற்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினா்.
மேலும் தங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரைக்கும் நாம் எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை” எனவும் கூறினர்