வலிந்து காணாமலாக்கப்படடோருக்கான சர்வதேசதினம் இன்று 30 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகாமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்று மட்டக்களப்பில் ஒன்று கூடி இந்த சர்வதேச தினத்தை அனுஷ்டித்தனர்.
பல மாதங்கள்ளாக, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள ஐந்து கிராமங்களில் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது உறவுகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய பதில்களை பெறுவதே அவர்களின் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.
இன்றைய நிகழ்வில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.