காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர்!

0
435

இரு கவிதைகள்

தணல்ச் செடி

சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல
மறைந்திருந்த முகத்தில்
அடுக்கியிருந்த இரகசியங்கள்
சொல்லாத எண்ணற்ற கதைகள்
கலந்தன தீயில்

கருணைமிகு உன் புன்னகை
கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின்
சிறகுகளில் ஒழுகுகிறது தணல்

நெருப்பை தின்று
காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர்
கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக
வெடிக்கின்றன விதைகள்

கந்தகம் சுமந்து
வெடித்துருகிய இடத்தில்
தளைத்தது தணல் மலர்களுடன்
ஒரு செடி

அனல் கமழுமுன்
சமுத்திர மௌனத்தால்
கோணிற்று உலகு

இப் பூமி உள்ளவரை
முள்போலக் குற்றுமுன்
முடிவற்ற கையசைப்பு
மற்றும்
பெருங்கடல் உறைந்த வெண் புன்னகை

அலைமகன்

இறுதி விடுமுறையில்
வீடு வருகையிலிட்ட
முத்தங்களின் நினைவிலுழல்கிறது
நீ வளர்த்த நாய்

கந்தகப் புகையால்
வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள்
நுழைந்துவிட்ட அம்மா
இன்னும் திரும்பவில்லை

ஓர் நள்ளிரவில்
நமது கடலில் நீ வெடிக்கையில்
அடித்திற்றுப் பெருமின்னல்

வெற்றிச்செய்தியாய் மாத்திரம்
வீடு திரும்புவாயெனத் தெரிந்திருந்தால்
இன்னும் சில முத்தங்களையேனும்
இட்டுத்தீர்த்திருப்பாள் அம்மா

இறுதித் தேநீரருந்திய
கோப்பையில் ஒட்டியிருக்கிறது
உன் புன்னகையினொரு துளி

நீ வெடித்த கடலில்
ஒரு மண்கோப்பை நீரெடுத்து
தாகம் நிரம்பியவுன் முகத்தைப்
பார்த்துப் பேசுகிறாள் அம்மா

அலைகளில் எழுமுன் பெயரை
உச்சரிக்கா நாளில்
இப் பெருங்கடல்
வற்றிப் போயிருக்கும்

தீபச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here