பிரான்சில் பேரெழுச்சிகொண்ட மே 18 முள்ளிவாய்க்கால் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
1174
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2017) வியாழக்கிழமை மிக பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிஸ்  La Chapelle ( மெட்ரோ) நிலக்கீழ்த் தொடருந்து நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க எமது நாட்டில் இடம்பெற்ற அவலங்களை ஆற்றுகை செய்தபடியும் பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடியும் பாரிஸின் முக்கிய பகுதிகளுக்கு ஊடாகச் சென்று Place de la République இனை அடைந்தது.
அங்கு முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் ​- தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் இடம்பெற்றன.
முதலில் அங்கு விசேடமாக அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப்பொறுப்பாளர் பொன்மலை அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை15.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் உறவினை இழந்த குணரட்ணம் மல்லிகா, குணரட்ணம் தமிழினி ஆகிய சகோதரிகள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பிரான்சு பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்குரிய ஆதரவு குழுவின் தலைவர், seine saint denis பாராளுமன்ற உறுப்பினர் Marie George Buffet

கிளிச்சி மாநகர சபையின் முன்னாள் பிரதி நகரபிதா Mirelle Gitton
சாவினி சுர் ஓர்ஜ் மாநகர சபை உறுப்பினர் David Fabre
குர்திஸ்தான் விடுதலை அமைப்பின் பிரதிநிதி Eksen Yekoon
செவ்ரான் நகரபிதா Stephane Gatignon  ஆகியோர்  பேரணியில் பங்கு கொண்டனர்
இவர்கள் தமது உரைகளில் எமது போராட்டங்களுக்கு தமது ஆதரவை உணர்வு பொங்கத் தெரிவித்திருந்தனர். அத்துடன் பிரான்சில் புதிதாக வந்துள்ள மிக இளவயது அதிபருடன் நாமும் இணைந்து பயணிப்போம் எனவும் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.


முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதை அனைவரையும் கலங்கவைத்திருந்தது.
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு சார்பில் உரை இடம்பெற்றதுடன், பிரான்சு மாவீரர் பணிமனையின் சார்பில் பிரெஞ்சுமொழியிலான உரையும் இ;டம்பெற்றது.
தமிழீழ மக்கள் பேரவை ஊடகப்பேச்சாளர் திரு.மோகனதாஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் ஆற்றல் மிகுந்த இளைஞர்கள் இணைந்துகொண்டு இவ்வாறான செயற்பாடுகளை முனைப்புடன் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். அதன் மூலமே எமது விடுதலையை எட்டமுடியும் எனவும் கேட்டுக்கொண்டார்.  செவ்ரோன் மற்றும் ஒள்னேசுபுவா மாணவிகளின் முள்ளிவாய்க்கால் நினைவுசுமந்த எழுச்சி நடனங்களும் அனைவரையும் சிந்திக்க வைத்திருந்தன.
பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தினரின் சிறப்பு நாடகமும் இடம்பெற்றிருந்தது.
கடும் மழைக்கு மத்தியிலும பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் இம்முறையும் எமது கோரிக்கைகள் பற்றிய வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.
(எரிமலைக்காக பாரிசிலிருந்து :காந்தன், ரிலக்சன் ,யூட், குரு, தஜீவன்,பகீர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here