பிரான்சில் பாரிஸ் République பகுதியில் இருந்து பிற்பகல் 14.00 மணியளவில் ஆரம்பித்த மே 1 தொழிலாளர் நாள் பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து Nation சுற்று வட்டப் பகுதியைச் சென்றடைந்தது.
பிரான்ஸ் தொழிற்சங்கங்களும் வெளிநாட்டவர்களுடன் இணைந்து தமிழ் மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர். பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டிருந்தனர்.
பல்வேறுபட்ட இனங்களினதும் கட்சிகளினதும் அமைப்புகளினதும் ஒன்றிணைந்த அணிவகுப்புக்கு மத்தியில் தமிழ் மக்களின் பேரணியும் இடம்பெற்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் பதாதைகளைத் தாங்கியநிலையில் கோசம் எழுப்பியவாறு மக்களும் அணிவகுத்துச் சென்றனர்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடிகளைத் தாங்கியிருந்ததுடன், ஒலி பெருக்கிகளிலும் உணர்வுமிக்க தமிழீழ எழுச்சி கானங்கள் ஒலித்தமை வெளிநாட்டவர்களை மிகவும் கவர்ந்திருந்தது.
மாலை 19.00 மணியளவில் தமிழ் மக்களின் பேரணி Nation சுற்று வட்டப் பகுதியைச் சென்றடைந்தது அங்கு நினைவுக் கூட்டம் இடம்பெற்றது.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)



















