பிரித்தானியாவில் யூன் 8 இல் பொதுத்தேர்தல் பிரதமர் தெரீசா மே அறிவிப்பு!

0
134

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதன் பின்னணியில், புதிய பொதுத் தேர்தல் மட்டுமே அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி நாட்டில் உறுதிப்பாட்டை கொண்டுவர முடியும் எனும் முடிவுக்கு தான் வந்துள்ளதாக தெரீசா மே தனது உரையில் குறிப்பிட்டார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் அவரது இன்றைய ‘திடீர் அறிவிப்பு’ வெளியாகியிருக்கிறது.
மிகவும் தயக்கத்துக்கு பிறகே இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு ஒருங்கிணைந்திருந்தாலும், நாடாளுமன்றம் அவ்வாறு இல்லை எனவும் தனது உரையில் மே அம்மையார் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகிவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அரசின் முன்னெடுப்புகளை முடக்குவதாகவும், அதன் மூலம் பேச்சுவார்த்தைகள் பலவீனமடைகின்றன என்றும் தனது உரையில் அவர் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படாவிட்டால், “எதிர்க்கட்சிகளின் பித்தலாட்டங்கள்” தொடரும் எனவும் அவர் சாடினார்.
நாளை-புதன்கிழமை-நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்தலை யூன் 8 ஆம் தேதி நடத்துவது குறித்த மசோதா கொண்டுவரப்படும்போது, அதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
அந்த மசோதா நாடாளுமன்றதில் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றாலும், அப்படியான மசோதாவை தாங்கள் ஆதரிக்க தயாராக இருப்பதாக தொழிலாளர் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here