தமது உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நல்லாட்சி சிறீலங்கா அரசாங்கம் உதாசீனம் செய்யுமாக இருந்தால் குறித்த போராட்டம் உயிர் மாய்ப்பு போராட்டமாக மாறும் என முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்களின் காணிகளிலுள்ள சிறீலங்கா இராணுவத்தை வெளியேறுமாறு கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலமீட்பு போராட்டம் நேற்று 23ஆவது நாளை எட்டியநிலையில் தொடர்ந்து வருகின்றது.
இதேவேளை புதுக்குடியிருப்பு பொதுமக்களால் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டமும் 11ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து வருகின்றது.
2009 ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் வசித்து வந்த பொதுமக்களை 2012ஆம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்படுவதாக அழைத்து வந்து வீதியில் இறக்கி விடப்பட்டதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.
தமது சொந்த வீட்டிற்கு செல்கின்றோம் என எண்ணி சென்ற நிலையில் தமது காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்ததை கண்டு ஏமாற்றம் அடைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் தமது போராட்டங்களிற்கு அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் எனவும், இல்லையேல் உணவுத்தவிர்ப்பு போராட்டம் உயிர் மாய்ப்புப்போராட்டமாக மாறும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை சொந்த வீடுகளின்றி உறவினர் வீடுகள், வாடகை வீடுகளில் வசித்து வந்த நிலையில் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.
இதுவரை தாம் முன்னெடுத்த போராட்டங்களிற்கு எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையிலே கடந்த 3 ஆம் திகதி தொடர் போராட்டம் ஒன்றை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டம் கடந்த 13ஆம் திகதி சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டமாக மாற்றப்பட்டது.49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக் கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.எனினும் தமது காணிகளுக்குள்கால் பதிக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.