பரவிப்பாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கிடைத்தவெற்றி சிறீலங்கா படை வெளியேறுகிறது !

0
285


கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் சிறீலங்கா இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என சிறீலங்கா இராணுவத்தினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தி, உறுதிப்படுத்தும் பட்சத்தில் உடனடியாகவே விடுவிக்கப்படும் என்றும் சிறீலங்காஇராணுவத்தினர் குறிப்பிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குச் சென்று துப்புரவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பிரதேசத்தில் சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி கடந்த திங்கள் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், காணிகள் விடுவிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அடுத்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்று முதல் தடவையாக தங்களின் வீடுகளுக்குச் சென்று மக்கள் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த பிரதேசங்களில் இருந்து சிறீலங்கா படையினரும் படிப்படியாக வெளியேறி வருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் சிறீலங்கா படையினரால் அமைக்கப்பட்ட வேலிகள் அகற்றப்பட்டு, அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக சிறீலங்கா படையினரால் மாவட்ட அரச அதிபரிடம் பரவிப்பாஞ்சான் சிறீலங்கா இராணுவ முகாம் அமைந்துள்ள காணி கையளிக்கப்படவுள்ளது.
இதன்பின்னர் பிரதேச செயலகம் ஊடாக உரிய மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரால் காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில், அவை எதுவும் நிறைவேறாத பட்சத்தில் தங்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே தாம் இதனை கருதுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here