2009 இல் வெள்ளைவானில் கடத்தப்பட்டமை தொடர்பில் வித்தியாதரனிடம் புதிய அரசு விசாரணை!

0
578

vithyathan-350-newsகடந்த 2009 ஆம் ஆண்டு மகிந்த அரசின் ஆட்சியின்போது கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றில் விடுவிக்கப்பட்ட உதயன் – சுடர் ஒளி முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனிடம் சிறிலங்காவின் புதிய அரசு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் சிறிலங்காவில் மகிந்த அரசினால் நடத்தப்பட்ட கடத்தல்கள் காணாமற்போதல் தொடர்பான பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
வெள்ளை வானில் கடத்தப்பட்டு உயிருடன் மீண்ட ஊடகவியலான் என்ற அடிப்படையில் வித்தியாதரனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக, மைத்திரி அரசின் முக்கிய அமைச்சர் வித்தியாதரனிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக என்.வித்தியாதரன் தெரிவித்துள்ளதாவது,

தலைநகரிலிருந்து முக்கிய அமைச்சரொருவர் இவ்விடயம் தொடர்பில் என்னிடம் வினவினார். 2009ஆம் ஆண்டு பெப்ரவரியில் வெள்ளை வானில் வந்தவர்களால் நான் கடத்தப்பட்டேன். அதன் பின்னர் இந்தக் கடத்தல் தொடர்பில் மேலிடத்துக்கு அழுத்தம் அதிகரித்ததால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டேன்.

வெள்ளை வானில் கடத்தப்பட்டு உயிருடன் மீண்டவன் என்ற அடிப்படையில் அக்கடத்தல்கள் தொடர்பாக என்னிடம் விபரங்களை பெறவேண்டும் எனவும் அதற்கு ஒத்துழைக்குமாறும் என்னை அந்த அமைச்சர் கேட்டுக்கொண்டார். என் தரப்பு அனுபவங்களை அவர்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக நான் அவருக்கு தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.

வெள்ளை வான் கடத்தல்களில் பின்னணியில் யார் யாரெல்லாம் செயற்பட்டார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே என்.வித்தியாதரனிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு பின்னர், வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வித்தியாதரன் பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தார். அதில் ‘தனக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், கடத்தல்களின் பின்னணி தொடர்பில் ஆராயப்படவேண்டும் என்பதோடு, வீட்டிலிருந்து வருகின்ற நாங்கள் உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்புவோமா என்பது தெரியாது’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த பேட்டியின் பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை குறித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் பேட்டி எடுப்பதற்காகச் சென்றிருந்தார். அந்த ஊடகவியலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அலுவலக வாசலுக்கு செல்லும் போது தான் வித்தியாதரன் கடத்தப்பட்டார்.

இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பிய போது பகிரங்கமாகவே வித்தியாதரனை விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்படுத்தி திட்டித்தீர்த்தார். அவர் ஒரு தீவிரவாதி எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், வித்தியாதரன் கடத்தப்பட்டதன் பின்னர் குறித்த விவகாரம் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால், பல மணி நேரத்தின் பின்னர் வித்தியாதரன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டு குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார்.

அப்போது, குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க செயற்பட்டார். இப்பொழுது இவர் டி.ஐ.ஜி. தரத்தில் இருக்கின்றார். இவரும் இப்பொழுது பல சிக்கல்களில் மாட்டியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாதரனின் வாக்கு மூலத்தின் பின்னர் பல உண்மைகள் வெளிவரும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here