சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து பன்னிராண்டாவது நாளாக கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு நகரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இன்று காலை பாரிய ஆர்பாட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா முன்றலில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் காந்தி வோ.சங்க தலைவர் அ.செல்வேந்திரன் தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இராணுவமே வெளியேறு.! நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.