ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா அரசியலுக்குள் பிரவேசிப்பதென்ற முடிவு நேற்று உறுதியாகிவிட்டது.
எம். ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம். ஜி. ஆர். நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய தீபா, தனது முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
“இன்றிலிருந்து நான் தீவிர அரசியலில் இறங்குகின்றேன். தமிழக மக்களுக்காக எனது வாழ்வை அர்ப்பணிக்கப் போகின்றேன். எம். ஜி. ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காட்டிய வழியில் சென்று மக்களுக்காக நான் சேவை புரியப் போகின்றேன்” என்று தனது முடிவை நேற்று அறிவித்தார் தீபா.
அ. தி. மு. க. ஆதரவாளர்கள் பெருமளவில் நேற்று தீபாவைச் சூழ்ந்து நின்று ஆதரவுக் கோஷம் எழுப்பினர். தீபா மீதான ஆதரவு அலை அதிகரித்திருப்பது நேற்றைய மக்கள் வெள்ளத்தில் பிரதிபலித்தது.
தீபாவின் அரசியல் எவ்வாறு அமையுமென்பது, ஜெயலலிதாவின் பிறந்த தினமான பெப்ரவரி 24ம் திகதி அறிவிக்கப்படும். முக்கியத்துமிக்க அன்றைய தினத்திலேயே புதிய கட்சி தொடங்குவது பற்றியெல்லாம் அறிவிப்பை வெளியிடவிருப்பதாக தீபா கூறினார்.
தீபாவுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் தற்போது திரண்டு வருவதனால் சசிகலாவின் செல்வாக்கு விரைவாக சரிந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அ. தி. மு.கவுக்குள் சசிகலா மீதான எதிர்ப்பு அதிகரித்திருப்பதனாலும், தீபாவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதனாலும் சசிகலா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.