பிரான்சில் உள்ள 64 தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடியது.
பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேச மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு மங்கள நாதஸ்வரம் இசைக்க பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு. பாலன் அவர்களும், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களும், மற்றும் செவினி சூ றோஸ் மாநகரசபை ஆலோசகரும், தமிழின உணர்வாளருமாகிய பிரெஞ்சு நாட்டவரான திரு. டேவிட் பாபிறே அவர்களும், அவரின் உதவியாளர் உட்பட பிரான்சு மூதாளர் இல்லத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழர் நலன்விரும்பிகள் பொங்கலுக்கான அரிசியிட்டு பொங்கியிருந்தனர். நண்பகல் 1.30 மணிக்கு பொங்கல் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. அழகுக்கோலமிட்டு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு விருந்தினர்கள் நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
மங்கல நாதஸ்வர இசையுடன் தமிழே உயிரே வணக்கம் பாடலுக்கான வரவேற்பு நடனத்தை செவ்ரோன் தமிழ்ச்சங்க மாணவிகள் வழங்கியிருந்தனர். வரவேற்புரையுடன் மயில், பாம்பு நடனங்களை சேர்ஐpபொந்துவாஸ் தமிழ்ச்சங்க மாணவிகளும், சுளகு நடனத்தினை திறான்சி தமிழ்ச்சங்க மாணவியரும் வழங்கினர் . பொங்கல் கவிதையினை நோசிலிகுரோன் தமிழ்ச்சங்கமும், சென்ரனி தமிழ்ச் சங்கமும் வழங்கியிருந்தனர். தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் தபேலா, மிருதங்கம், கடம், தவில், வயலின் இசைகொண்ட தாளவாத்திய கச்சேரியும் இடம் பெற்றன, பட்டி மன்றமும் நடைபெற்றது. புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர் பண்பாடுகள் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றதா? கைவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றதா? என்கின்ற தலைப்பில் நடைபெற்றது. இருதரப்பினரும் தங்கள் உள்ளக்கிடங்கில் உள்ள கருத்துக்களையும், நடைமுறையில் அன்றாடம் காண்கின்ற விடயங்களையும் தெரிவித்து மக்களிடம் கரகோசங்களைப் பெற்றுக்கொண்டனர் .பொங்கல் சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரு. பாலசுந்தரம் அவர்களும், நன்றியுரையினை பிரான்சு தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் திரு. சாந்திகுமார் அவர்களும் வழங்கியிருந்தனர்.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு*























