வவுனியா, தோணிக்கல் பகுதியில் விசேட தேவையுடையவரால் நடத்தப்பட்டு வந்த இலத்திரனியல் உபகர ணங்கள் திருத்தும் நிலையத்தில் வானொலியின் ஒலி பெருக்கியினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பழைய பொருட்களை கொள்வனவு செய்யும் ஒருவரிடம் இருந்து மேற்படி கடை உரிமையாளர் ஒருவர் இந்த வானொலி, ஒலிபெருக்கி இரண்டையும் கொள்வனவு செய்துள்ளார்.
இதனையடுத்து விசேட தேவையுடையவரான திருத்துநர் ஒரு ஒலிபெருக்கியை திருத்தம் செய்வதற்காக கழற்றியபோது அதனுள் ஏதோ ஒரு பொருள் பேப்பர் ஒன்றினால் சுற்றப்பட்டு காணப்பட் டுள்ளது. அதனை திறந்து பார்த்தபோது அது கைக்குண்டு என்பதனை அறிந்ததும் அவர் கடையில் இருந்து வெளியில் வந்து அயலவர்களின் உதவியை நாடி பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
இந் நிலையில் மற்றைய ஒலிபெருக்கியும் பாரமாக உள்ளமையினால் அதனுள்ளும் கைக்குண்டு காணப்படலாம் என திருத்துநர் தெரிவித்ததுடன் கைக்குண்டுகள் ஆபத்தான நிலையில் பசைத் தாளால் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.