லெப்கேணல் புலேந்திரன், லெப்.கேணல் குமரப்பா உட்பட 12 வேங்கைகளின் நினைவு வணக்கமும் லெப்.கேணல் சந்தோஸ் அம்மான், லெப்.கேணல் விக்டர், லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்டோபர் மாதத்தில் வீரகாவியமான மாவீரர்கள் அனைவருக்குமான நினைவு வணக்க நிகழ்வு நேற்று (30.10.2016) ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இவ்றி பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை இவ்றி சூசென் தமிழ்ச் சங்க உப தலைவர் தவராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
ஒக்டோபர் மாதத்தில் வீர காவியமான மாவீரர்கள் அனைவருக்குமான ஈகைச்சுடரினை 09.12.1997அன்று யாழில் வீரச்சாவடைந்த மேஜர் ஜெயசீலனின் சகோதரியும்,
லெப்.கேணல் விக்டர், லெப்.கேணல் புலேந்திரன், லெப்.கேணல் குமரப்பா உட்பட 12 வேங்கைகள், லெப்.கேணல் சந்தோஸ் அம்மான் ஆகிய மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை 27.09.1997அன்று ஜெயசிகுறு நடவடிக்கையின் போது புளியங்குளம் பகுதியில் வீரச்சாவடைந்த மேஜர் ஜெயசீலனின் சகோதரனும்,
லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை 26.10.1996 அன்று பிரான்சு மண்ணில் வீரச்சாவடைந்த கப்டன் கஜனின் சகோதரனும் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மாவீரர்களின் கானம் ஒலிக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் அணியாக வந்து சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
இதனையடுத்து அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாகின, ஆசிரியை குமுதினி பிரதீபனின் நெறியாள்கையில் இவ்ரி சூசென் தமிழ்ச்சோலை மாணவி சௌமியா பத்மநாதன், மாணவி ருஸ்சிதா மகாதேவன் ஆகியோரின் எழுச்சி நடனங்களும், பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழக பாடகிகளான சோதிராசா சோனா, கோகிலதாஸ் சூரியா ஆகியோர் மாவீரர் நினைவுசுமந்த பாடல்களைப் பாடினர்.
தொடர்ந்து சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், மாவீரர்கள் எனப்படுபவர்கள் எமது தேச விடிவிற்காகத் தமது உச்ச பலத்தைக் கொண்டு சமராடி தமது உயிர்களையே ஆகுதியாக்கியவர்கள். இன்று தாயகத்தில் ஒரு சிறிய பலத்தையே அழிப்பதில் எதிரி முனைப்புக்காட்டுகின்றான். இதற்கு எமது இளம் சமுதாயத்தினரே பலியாகின்றனர். அங்கே சமூக சீர் கேடுகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றோம். நாம் உறுதியாக நின்று இவற்றை முறியடிக்க முன்வரவேண்டும் என்றார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க அனைவரும் எழுந்து கைகளைத் தட்டினர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு) (படங்கள்:யூட், பகீர்)