தாயாரை அடித்து கொலை செய்த தனயனுக்கு கடூழிய சிறை!

0
365

jaffna-courtகல்முனை சம்மாந்துறையில் 68 வயது நிரம்பிய தாயாரை தடியால் அடித்து கொலை செய்த தனயனுக்கு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எட்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

சாரதாதேவி என்ற பெண்ணே கொல்லப்பட்டவராவார். கு. சிவகுமார் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரால் கல்முனை மேல் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் அடிப்படையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இந்தக் கொலை வழக்கில் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி லாபிர் சாட்சிகளை நெறிப்படுத்தினார்.

எதிரி தரப்பில் சட்டவாதி லியாகத் அலி நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

மரணமடைந்த சாரதாதேவியை 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி, எதிரி கிளிசூரியா தடியாலும் பனை மட்டையாலும் அடித்து கொலை செய்ததாக கண்கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தனர்.

இறந்தவரின் தலை, கழுத்து, நெஞ்சு, அடிவயிறு மற்றும் எலும்புகளில் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் சிறிதளவு கூர் கொண்ட மொட்டையான ஆயுதத் தாக்குதல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை நடத்திய வைத்தியர் சாட்சியமளித்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து எதிரி கனகசிங்கம் சிவகுமார் எதிரிக்கூண்டில் நின்று வாக்குமூலமளித்தார்.

“நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எனது தாய் கெட்ட வார்த்தைகளால் என்னைப் பேசினார். எனக்குக் கோபம் வந்தது.

அந்தக் கோபத்தில் வேலியில் இருந்த கிளிசூரியா தடியைப் பிடுங்கி இரண்டு மூன்று அடி அம்மாவை அடித்தேன். அடித்ததும் அவர் மயங்கிவிட்டார்.

அதன் பின்னர் அவரைத் தூக்கிச் சென்று வீட்டு மண்டபத்தில் வளத்திவிட்டு, தண்ணீர் எடுத்து வந்து அவருடைய முகத்தில் தெளித்தேன் ஆனால் அவர் எழும்பவில்லை. எனது தாயார் என்னை கெட்ட வார்த்தைகளினால் பேசி கோபப்படுத்தியதால் தான் திடீரென அம்மாவைத் தாக்கிவிட்டேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலமளித்தார்.

அதேவேளை, எதிரி தரப்பு சட்டத்தரணி எதிரி மீது கருணை காட்டுமாறு கருணை விண்ணப்பம் செய்தார்.

விசாரணைகளின் முடிவில் திடீர்க் கோபம் காரணமாக இடம்பெற்ற கொலையாக இக்கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் எனினும் இந்த வழக்கில் பல விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அவர் வழங்கிய தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது:

தாயாரை அடித்துக் கொல்லும் எண்ணம் எதிரிக்கு இருக்கவில்லை. தாயார் கெட்ட வார்த்தைகளினால் அவரைக் கோபப்படுத்தியதே இந்தக் கொலைக்குப் பிரதான காரணமாக உள்ளது.

ஆயினும் இறந்தவரின் நிலைமை, கொலைச்சம்பவ நிகழ்வு குறித்து எதிரி கூறியுள்ள நிகழ்வுகள் மற்றும் நடைபெற்றுள்ள சம்பவத்தின் பாரதூரத் தன்மை என்பவற்றை நீதிமன்றம் கவனத்தில் எடுத்து பரிசீலித்துள்ளது.

இந்தப் பரிசீலனையின் அடிப்படையில் தாயாரைக் கொன்ற இந்த வழக்கில் எதிரி கைமோசக் குற்றவாளி என இந்த நீதிமன்றம் காண்கின்றது.

இறந்தவர் தாயராவார். கொலை செய்தவர் மகன். இந்தக் கொலையை நேரில் கண்டதாக கண்கண்ட சாட்சியமளித்தவர் தந்தையாவார். எனவே, ஒரு குடும்பத்தின் உணர்வுபூர்வமான வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டியிருக்கின்றது.

கொலைக் குற்றவாளியாகக் காணப்படுகின்ற எதிரிக்கு இந்த நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கின்றது.

எதிரி பத்தாயிரம் தண்டப் பணமாக செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதம் சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பையடுத்து தண்டனை வழங்கப்பட்ட எதிரியை சிறைக்காவலர்கள் பொறுப்பெடுத்து நீதிமன்றத்தில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here