வடிரக வாகனத்தால் மோதுண்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இவ் விபத்துச் சம்பவம் நேற்றுக் காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதி சிவன் கோவிலுக்கு முன்பாக இடம்பெற்றது.
தாவடி வடக்கு கொக்குவிலைச் சேர்ந்த, யாழ்.மத்திய கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தேவராஜ் நிறோஜ் (வயது 19) என்ற மாணவனே இதில் உயிரிழந்தவராவார்.
மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ள உணவகத்திற்கு சென்று விட்டு பாடசாலை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை பின்னால் சென்ற வடிரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
இதன் போது படுகாயங்களுக்கு உள்ளான மாணவன் அங்கு நின்றிருந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நண்பகல் 12 மணியளவில் மாணவன் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரஸ்தாப மாணவருக்கு யாழ்.மத்திய கல்லூரி உயர் தர வகுப்பில் கல்வி கற்பதற்கு அண்மையில் அனுமதி கிடைக்கப் பெற்ற நிலையில் நேற்று முதற்தடவையாக அவர் பாடசாலை நோக்கி பயணித்திருந்த வேளை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.