
மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த பகுதி மீனவர் சங்க தலைவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகலில் இடம்பெற்றுள்ளதாகவும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது டன் ஒருவரின் சடலம் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்க தலைவரான நகேந்திரன் என அழைக்கப்படும் துரைராஜா முத்தையா , விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

குறித்த கடல் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 11.00 மணியளவில் மீன் பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும் நீரில் மூழ்கினர்.
இதில் மீனவரான 45 வயதுடைய செல்வகுமார் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அமரசிங்கம் பரமலிங்கம் என்ற மீனவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் மீனவர் சங்க தலைவரான நாகேந்திரன் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள், உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


