‘நீதியின் ஓலம் – 02’ இறுதிநாளில் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி; ஈழத்தமிழர் மீதான சகல படுகொலைகளுக்கும் பன்னாட்டு நீதி தேவை என வலியுறுத்து

செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீதான இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு பன்னாட்டு நீதிகோரி யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் கடந்த 14.08.2026ஆம் திகதி தொடக்கம், 17.08 2026ஆம் திகதி இன்று வரையில் ‘நீதியின் ஓலம் – 02’ என்னும் அணையாவிளக்கு தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தொடர்போராட்டத்தின் இறுதிநாளான 17.08.2026இன்று ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகெலைகளுக்கும் பன்னாட்டு நீதிதேவையென வலிறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டப் பேரணியின் நிறைவில் ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் ஒன்றும் உரிய தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த ‘நீதியின் ஓலம் -02’ அணையாவிளக்கு தொடர் போராட்டத்தின் இறுதிநாளான 17.08.2026இன்றைய தினம், செம்மணி போராட்ட வளாகத்தில், செம்மணி படுகொலையின் கொடூரத்தினை வெளிப்படுத்தும் வகையிலான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஜெயம் நாடகக் கல்லூரியினரின் “செம்மணியில் எங்கள் கண்மணிகள்” என்னும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செம்மணி அணையாவிளக்கு நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டக்காரர்கள் அகவணக்கம் செலுத்தியதுடன், மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளுக்கு பன்னாட்டு நீதிகோரி வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும்சேர்ந்த பெருந்திரளான தமிழ் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டப்பேரணியில் பங்கேற்றிருந்தவர்கள் செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு நீதிகோரும் வகையிலான பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

அத்தோடு குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது யாழ்ப்பாணம் பொதுநூலக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 139, கோவில் வீதி, நல்லூர் – யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயம் வரையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி இடம்பெற்ற போது யாழ் நகரின் சில வீதிகளில் சிறிது நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.
அதேவேளை ஆர்ப்பாட்டப் பேரணியின் தொடர்ச்சியாக செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகளுக்கு பன்னாடுகளின் நீதிகோரி ஐக்கிய நாடுகள் சபைக்கான மகஜரும் இதன்போது உரியவர்களிடம் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
















