
சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு மற்றும் நகர நாகரிகம் ஆகியவை வெறும் இலக்கியக் கற்பனைகள் அல்ல, அவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் என்பதை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறை ஆய்வுக்கூடம் வெளியிட்டு வரும் புதிய ஆய்வுகள் தெள்ளத் தெளிவாக உறுதிசெய்துள்ளன.
கீழடி, கொந்தகை, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய தொல்லியல் தளங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால மனித எலும்புக்கூடுகளில் இருந்து 75,000க்கும் மேற்பட்ட மரபணு குறியீடுகள் (Genetic Markers) வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்டு, மரபணு வரிசைமுறை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இது தெற்காசிய வரலாற்றிலேயே மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த பிரம்மாண்டமான DNA பகுப்பாய்வு, பழந்தமிழர்களின் மரபணுத் தொடர்ச்சியை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது.
உலகளாவிய மனித மரபணு மாறுபாடுகளின் தொகுப்பான ‘1000 Genomes Project’ தரவுகளுடன் இந்த முடிவுகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.
அதில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் மரபணுக்கள், இன்றைய தென்னிந்தியர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் ஒட்டுமொத்த தெற்காசிய மக்களுடன் மிக நெருங்கிய மற்றும் நேரடி மரபணுத் தொடர்பைக் கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தலைமுறை தலைமுறையாக இந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்களின் மரபணுத் தொடர்ச்சி எவ்வித இடைவெளியுமின்றித் தொடர்வது உறுதியாகியுள்ளது.
மரபணு ஆய்வுகளுக்கு இணையாக, இங்கிலாந்தின் Liverpool John Moore பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட மனித மண்டையோடுகளைக் கொண்டு டிஜிட்டல் முறையில் அவர்களின் முக அமைப்பை மறுஉருவாக்கம் (Facial Reconstruction) செய்துள்ளனர்.
இதன்மூலம் சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் தோற்றம் எப்படி இருந்தது என்பதை நாம் நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், தொல்லியல் பானை ஓடுகளில் கண்டறியப்பட்ட புரதங்கள் மற்றும் உயிர்வேதியியல் படிவுகள் (Biochemical residues), அவர்களின் தினசரி உணவு முறையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன.
பானைகளில் கண்டறியப்பட்ட Cholesterol படிவுகள் அவர்கள் உணவில் இறைச்சி முக்கியப் பங்கு வகித்ததைக் காட்டுகின்றன.
மேலும், பழந்தமிழர்கள் பல வகையான நெல் ரகங்களையும், தினை போன்ற சிறுதானியங்களையும் பயிரிட்டுப் பயன்படுத்தியுள்ளனர்.
பானை எச்சங்களில் கண்டறியப்பட்ட நெய், பருப்பு, கீரை, பால், வெள்ளரிக்காய், நிலக்கடலை மற்றும் தேங்காய் ஆகிய கரிம மூலக்கூறுகள், சங்க இலக்கியங்களான குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு மற்றும் பொருநராற்றுப்படை ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள உணவு முறையோடு நூற்றுக்கு நூறு கச்சிதமாகப் பொருந்துகின்றன.
இலக்கிய வரிகளுக்கு அறிவியல் சான்றுகள் உயிர்கொடுத்துள்ள இந்த அரிய கண்டுபிடிப்புகள், விரைவில் சர்வதேச அறிவியல் இதழ்களில் விரிவான ஆய்வுக் கட்டுரைகளாக வெளியாகவுள்ளன.
கீழடியில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டடங்கள், கழிவுநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் ஆகியவை அன்றைய தமிழர்களின் உயர்ந்த நகர நாகரிகத்தைச் பறைசாற்றுகின்றன.
அதேபோல, சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புப் பொருட்கள் கி.மு. 3345-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என Carbon Dating மூலம் தெரியவந்துள்ளது.
இது உலகிலேயே மனிதன் இரும்பை உருக்கிப் பயன்படுத்திய மிகப்பழமையான காலக்கட்டங்களில் ஒன்றாகும்.
இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள், மரபணு ஆய்வுகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லும் உண்மை ஒன்றுதான், தமிழினம் வெறும் பழமையான இனம் மட்டுமல்ல, உலக நாகரிகங்களின் விடியலிலேயே தன் முத்திரையை பதித்த தொன்மையான இனம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட நகரமைப்பு, உயர்ந்த நெசவுத் தொழில், இரும்புத் தொழில்நுட்பம், எழுத்தறிவு மற்றும் வளமான வாழ்வியலைக் கொண்டு வாழ்ந்த பழந்தமிழர்களே, இப் பூவுலகின் மூத்த குடிகள் என்பதும், மனித குல நாகரிகத்தின் ஆதித் தொட்டில் தமிழ்மண்ணே என்பதும் இந்த மரபணுப் புரட்சியின் மூலம் ஆணித்தரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது.


